வெள்ளி, 1 ஜூலை, 2011

போராட்டக்களத்தில் 60 ஆண்டுகள் - செங்கொடி உயர்த்தி வணங்குகிறோம்

 போராட்டக்களத்தில் பூத்த செம்மலர்                                                           

        சுதந்திர இந்தியாவில்  நடத்தப்பட்ட 245 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள்        ( இப்போது இருக்கிற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியைப் போல்) மக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடிப்பது, பாலிசிதாரர்களுக்கு சரியான முறையில் உரிமங்கள் வழங்காமல் ஏமாற்றுவது போன்ற செயல்களைத் தான் செய்து வந்தன. அன்றைக்கும்  அதை தட்டிக்கேட்கவேண்டிய அரசு கண்டு கொள்ளாமல் தான் இருந்தது. இது போன்று மக்களை ஏமாற்றும் தனியார் முதலாளிகளின் செயல்பாடுகளை  பொறுத்துக்கொள்ள முடியாத அந்த  தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் வேலை செய்துவந்த ஊழியர்களெல்லாம் சேர்ந்து 1951 - ஆம் ஆண்டு ஜூலை 1 -ஆம் தேதி அன்று அன்றைய பாம்பே - இன்றைய மும்பையில் தாதர் என்ற பகுதியில்  நடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1 தேதிகளில் நடந்த தொடக்க மாநாட்டில் அகில  இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடங்கிவைக்கப்பட்டது
                   இந்த சங்கம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரியோ, போனஸ் கோரியோ, பதவி உயர்வு கேட்டோ தொடங்கப்பட்டச் சங்கமல்ல. மக்களின் நிதி கொள்ளை போவதை தடுக்க, தனியார்வசம் இருக்கும் இன்சூரன்ஸ் துறையை தேசவுடைமை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையோடு தொடங்கப்பட்டச் சங்கம் என்பது பெருமையளிக்கக்கூடிய அம்சமாகும். போராட்டக்களத்தில் பூத்த செம்மலர் தான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்றால் அது மிகையாகாது. அதனால் தான் இந்த சங்கம் இன்றைக்கும் இந்தியாவில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு எல்லாம் வழிகாட்டும் சங்கமாக விளங்குகின்றது.
                  இந்திய இன்சூரன்ஸ் துறை 1956 - ஆம் ஆண்டு  தேசவுடைமை செய்யப்பட்டதற்கு  - பொதுத்துறை எல். ஐ. சி தொடங்கப்பட்டதற்கு  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்சங்கம் நடத்திய தொடர் போராட்டமே காரணம். வழக்கம் போல் - மற்ற தொழிற்சங்கங்களைப் போல் ஊழியர் நலன்களில் மட்டும் அக்கறை காட்டாமல், அதையும் தாண்டி கடந்த அறுபது ஆண்டுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேச நலன், மக்கள் சேவை, சமூக மாற்றம், தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பொதுத்துறை எல். ஐ. சி. பாதுகாப்பு  என பல்வேறு போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்திவருவது மட்டுமல்லாமல், தன்னுடைய உறுப்பினர்களை  ஒரு சமூக சிந்தனையாளர்களாகவும், தேசபக்தர்களாகவும், முற்போக்கு சிந்தனையாளர்களாகவும் வளர்த்து உருவாக்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக  இருக்கிறோம்  என்பதே பெருமையளிக்கக்கூடிய விஷயமாகும். 
                இன்று வைரவிழா காணும்  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை மேலும் பலம் சேர்த்து, மேலே சொன்ன அத்தனைப் போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வோம். செங்கொடியை உயர்த்திப் பிடிப்போம்...
                  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வாழ்க...


கருத்துகள் இல்லை: