திங்கள், 2 ஜனவரி, 2012

மன்மோகன் சிங் பேச்சில் பொய்யும் பித்தலாட்டமும் தான்...!

                                      ஊழல் புயல்களும் விலைவாசி வெள்ளமுமாய் அலைக்கழிக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு, நாட்டின் பிரதமர் புத்தாண்டுச் செய்தி வெளியிடுகிறபோது, புதிய ஆண்டில் நம்பிக்கையளிக்கக்கூடிய சில அறிவிப்புகளை எதிர்பார்ப்பது இயல்பு தான். ஆனால் வெறும் வார்த்தைகளால் பந்தலமைத்திருக்கிறார் பிரதமர். அவரது புத்தாண்டுச் செய்தியில் இருக்கிற ஒரே ஒரு உண்மை, இன்றைக்கு ஊழல் என்பது மையப்பொருளாகியிருக்கிறது என்று அவர் சொன்னது தான்.
                   மற்றபடி அவருடைய செய்தியின் இதர வாக்கியங்கள் அனைத்தும் போகாத ஊருக்கு வழி சொல்கிற வேலையைத்தான் செய்கின்றன. “1990ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு ஊழலின் பழைய வடிவங்கள் மறைந்துவிட்டன. ஆனால் புதிய வடிவங்கள் தலைதூக்கிவிட்டன. அவற்றை சமாளித்தாக வேண்டும்,” என்று அவர் கூறியிருக்கிறார். ஒரு பொருளாதார வல்லுநரின் ஆய்வறிக்கை போன்று ஒலிக்கும் இந்தச் சொற்களை மேலோட்டமாகப் பார்க்கையில் தெளிவான கருத்து என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் உண்மையை ஒப்புக்கொள்வது போன்ற இந்தச் சொல்லாடல்களின் தயவோடு ஒரு உண்மை மறைக்கப்படுகிறது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் எனப்பட்ட கொள்கைகள் தொடங்கியதைத் தொடர்ந்து ஊழல்கள் புதிய வடிவமெடுத்துவிடவில்லை; புதிய வடிவிலான ஊழல்களுக்கு ஊற்றுக்கண்ணே அந்தக் கொள்கைகள்தான் என்பதே அந்த உண்மை.
               “ஊழலை ஒழிப்பது சரியான தொழில்வளர்ச்சிக்கு முக்கியத்தேவை; அத்துடன் அது, தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் அதிகாரத் தில் உள்ளோரிடத்தில் ஊழலைச் சந்தித்துக் கொண்டிருக்கிற சாதாரணக் குடிமக்களின் கோரிக்கையுமாகும்,” என்று பிரதமர் கூறியிருக்கிறார். இதைச் சொல்கிறபோது கூட தொழிலதிபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மக்கள் கோரிக்கையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். யாருடைய நலன்களுக்கு இந்த அரசின் மனதில் முக்கிய இடம் தரப்பட்டிருக்கிறது என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?
                இந்தக் கேள்வியை மேலும் உரக்கக் கேட்க வைக்கிறது பிரதமரின் அடுத்த கருத்து. சில் லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய ஆளும் கூட்டணி யிலேயே எழுந்துள்ள எதிர்ப்பு பற்றி மறைமுக மாகக் குறிப்பிட்டுள்ள அவர், “மாற்றங்கள் குறித்த சிந்தனைகளைக் கண்மூடித்தனமாக மறுப்பவர்களாக நம்மை நாமே பூட்டிவைத் துக்கொள்ளக்கூடாது,” என்று கூறியிருக்கிறார். சொந்த நாட்டில் கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுகிற இவ்வகை அந்நிய முதலீட்டிற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பை மத்திய அரசு சற்றும் மதிக்கவில்லை என்பதன் வெளிப்பாடுதான் இது.
                 கல்வி உள்ளிட்ட வாழ்க்கைநிலைப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு, மின்சாரப் பாதுகாப்பு, இயற்கைச் சூழல் பாதுகாப்பு, தேசப்பாதுகாப்பு என்ற ஐந்து அம்சக் கொள்கைத் திட்டம் ஒன்றை அவர் முன்மொழிந்திருக்கிறார். அரசின் தற்போதைய கொள்கைகள் இந்த ஐந்து அம்சங்களுக்குமே எதிரானவை என்பதை அனுபவம் காட்டுகிறது.
                 அந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்கத்தான் ஐ.மு.கூட்டணி அரசும் காங்கிரஸ் தலைமையும் தயாராக இல்லை. 

கருத்துகள் இல்லை: