செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

விண்வெளி அலைக்கற்றை ஊழல் - இந்த ஊழல் புகாரிலும் பிரதமர் சிக்கவில்லை...பலே...!


பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்... 
             மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மற்றுமொரு மெகா ஊழல் பற்றி ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக இது பற்றிய செய்திகள் தான் ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. 
                       இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - இஸ்ரோ - வின்  வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், விண்வெளித்துறை தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2005ம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவுடன் சாதாரண தொலைத் தொடர்பு அலைக்கற்றைகளை விட மிகவும் சக்திவாய்ந்த விண்வெளி அலைக்கற்றைகளை பகிர்ந்துகொள்வது தொடர்பான இந்த பேரத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா 70 மெகா ஹெட்ஸ் சக்தி கொண்ட உயர்தரம் வாய்ந்த தொலைத்தொடர்பு அலைக் கற்றைகளை பயன்படுத்தும் உரிமங்களை பெற்றது என்றும், இதற்காகவே இரண்டு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன  என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ.2லட்சம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த  ஒப்பந்தம் கையெழுத்தான கால கட்டத்தில் இஸ்ரோ தலைவராக பணியாற்றிய விஞ்ஞானி மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகள் மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு தரப்பில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி தான் செய்திகள் ஒருதலைப்பட்சமாகவே வருகின்றன. இந்த ஊழலில் இந்த குறிப்பிட்ட விஞ்ஞானிகள் மட்டுமா சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பது தான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.
            ஏனென்றால், விண்வெளித்துறை பிரதமரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் துறையாகும். அவரது நேரடிப் பார்வையின் கீழ் இயங்கக்கூடிய இந்தத் துறையில் நடந்த ஊழலில் யார் யாருக்கு பங்கு உள்ளது என்பது குறித்து முழு உண்மைகள் இன்னமும் வெளிவரவில்லை என்பது தான் உண்மை.  இஸ்ரோவின் தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன், இந்த ஊழலுக்கு மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகள் மட்டுமே   காரணம் என்ற அடிப்படையில் இந்த வழக்கை முன்வைக்கிறார். ஆனால் தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்தக் குற்றச்சாட்டில் தன்னை சிக்க வைத்திருப்பதாக மாதவன் நாயர் மறுக்கிறார். விஞ்ஞானிகள் வட்டாரத்தைத் தாண்டி, இந்த ஊழலில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கம் - இடைத்தரகர்கள் என பலதரப்பினருக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போலவே இந்த ஊழல் விவகாரத்திலும் அப்போதே பிரத மர் அலுவலகம் ஏன் தலையிடாமல் இருந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என பல தரப்பிலும் கருத்துக்கள் எழுந்துள்ளன. பிரதமர் அலுவலகத்தின்கீழ் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிற விண்வெளித்துறையில் நடந்துள்ள இந்த ஊழலுக்கு, 4 விஞ்ஞானிகளை மட்டும் பலிகடாவாக்கிவிட்டு ''முக்கியப்புள்ளிகளை''  தப்பிக்க  வைக்க  முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகமும் விஞ்ஞானிகள் வட்டாரத்திலும், பொது மக்கள் மத்தியிலும் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது நியாயமானதே..
              இந்த விவகாரத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையை மட் டுமே வைத்துக்கொண்டு மூத்த விஞ்ஞானிகள் குற்றவாளிகள் என முடிவுக்கு வர முடியாது. விண்வெளி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் முழு உண்மையையும் வெளிக்கொண்டுவர சுயேட்சையான மற்றும் பாரபட்ச மற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பது தான் பொது மக்கள் மற்றும்  நடுநிலையாளர்களின்  எதிர்ப்பார்ப்புகளாகும்.

கருத்துகள் இல்லை: