சனி, 3 மார்ச், 2012

பங்குச்சந்தை சூதாட்டத்தில் ஓ.என்.ஜி.சி - மக்கள் நிதியை இறக்கியது எல்.ஐ.சி.

               2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாயைத் திரட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்திருந்தது. முதலாளித்துவக் கொள்கைகள் அதன் குரு பீடமான அமெரிக்காவில் உருவாக்கிய நெருக்கடியால் பங்குச் சந்தைகளின் தலைக்கு மேல் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியப் பங்குச்சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல. 40 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கில் பிப்ரவரி 29 ஆம் தேதி வரையில் 1,145 கோடி ரூபாயை மட்டுமே திரட்ட முடிந்தது. .
                பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் பங்குகளை விற்றதன் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டது. ஆனால் வரும் மத்திய நிதிநிலை அறிக்கையின்போது பெரும் முதலாளிகளுக்கு ''சலுகைகள்'' வழங்குவதற்கு நிதியிருப்பை ''உத்தரவாதம்'' செய்து கொள்ளவும் அவசரகதியில் எவ்வளவு அள்ளினாலும் குறையாமல் லாபம் தரும் ஓ.என்.ஜி.சியின் (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கழகம்) பங்குகளை சூறையாட மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதன் படி 42.80 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.290 என்ற விலைக்கு விற்பதாகவும் அறிவிப்பு செய்தனர். இதன்மூலம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரும் என்று அவர்கள் திட்டம் தீட்டினர்.
               ஆனால் பங்குகள் விற்பனைக்கு வந்த மார்ச் 1 அன்று மந்த நிலை நிலவியதால் 29.22 கோடி பங்குகளுக்குத்தான் பதிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக குறுக்கு வழியில் துடிப்போடு இறங்கிய மத்திய அரசு, மிகவும் பாதுகாப்பான நிதி நிறுவனங்கள் என்று மக்களால் அழைக்கப்படும் எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய இரண்டையும் இறக்கிவிட் டது. எஞ்சியுள்ள பங்குகள் அனைத்தையும் வாங்கியாக வேண்டும் என்ற உத்தரவுகள் பறந்தன என்றும்  செய்திகள் வெளியாகியுள்ளன.
                  அதற்காக திரைமறைவில் பல வேலைகள் நடந்தன. 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தான் திரளும் என்ற நிலையில், எஞ்சியுள்ள பங்குகள் அனைத்தையும் எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை வாங்கியுள்ளன. எல்.ஐ.சி. மட்டும் 12 கோடி பங்குகளை வாங்கியிருக்கிறது. இதன்மூலம் பங்குச்சந்தைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியும் நடந்திருக்கிறது. அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றாலும் ஓ.என்.ஜி.சி. பங்குகளை சூதாட்டத்தில் இறக்கியதோடு, மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ள இரண்டு பெரும் பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தையும் அதில் போட்டிருக்கிறார்கள்.
                 உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் சலுகைசார் முதலாளித்துவக் கொள்கையைத்தான் மறைமுகமாக இங்கு அரங்கேற்றுகிறார்கள். சட்ட ரீதியான சலுகைகள், அரசு நிதியுதவி மற்றும் சிறப்பு வரிச்சலுகைகள் போன்றவற்றையே சலுகைசார் முதலாளித்துவக் கொள்கையின் அம்சங்களாகச் சொல்கிறார்கள். பெரும் முதலாளிகளின் கொள்ளைக்கு பங்குச்சந்தை கேந்திரமானதாக இருந்து வருகிறது. அதில் நிலவும் மந்தத்தைப் போக்க கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களைப் பணயம் வைக்கிறார்கள். வந்தால் பெரும் முதலாளிகளுக்கு, போனால் மக்கள் தலையில் என்பதுதான் ஆட்சியாளர் களின் தாரக மந்திரமாக உள்ளது. இந்தத் தாரக மந்திரங்களுக்கு எதிராக வலுவான முழக்கங்கள் எழுந்து வருகின்றன. நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலை நிறுத்தம் என்று சொல்லுமளவுக்கு பிப்ரவரி 28 அன்று அனைத்துப்பகுதியினரும் இணைந்து போராடியிருக்கிறார்கள். ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை போன்ற ஏமாற்று வேலைகள் மக்களின் போராட்டக் குணத்திற்கு உரமிடும் வேலையையே செய்யும். போராட்ட அலைகள் தீவிரமாகும்.

கருத்துகள் இல்லை: