ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஏனுங்க இந்த கழுதை கதை தெரியுங்களா...? இந்த கதைக்கும் தமிழக மக்களுக்கும் சம்பந்தமில்லைங்கோ...!

             ஒரு ஊருல ஒருத்தர் ஒரு கழுதைய வளர்த்தாரு... அவரு அதை எப்பவும் அடிச்சிகிட்டே இருப்பாரு... அது நின்னா அடிப்பாரு... உக்காந்தா  அடிப்பாரு... சாப்டா அடிப்பாரு... பொதி சுமந்து போனா அடிப்பாரு... தூங்குனா அடிப்பாரு... எப்போதும் அந்தக் கழுதைய அடிக்கிறது தான் அவருக்கு வேலை... 
              இப்படித்தான் ஒரு நாளு.... இதை தினமும் கவனிக்கிற பக்கத்து வீட்டில இருந்த கழுதை என்ன செய்ததுன்னா...? இந்த கழுதைகிட்ட பேச்சு கொடுத்தது. '' என்ன உன் முதலாளி எப்போ பாத்தாலும் உன்னை அடிச்சிகிட்டே இருக்காரு... நீயும் பொறுமையா இருக்கே... வெளியில பொதி சுமந்து போகும்போது அறுத்துகிட்டு ஓடிட வேண்டியது தானே...எத்தனை காலத்துக்குத் தான் நீ இப்படியே அடி வாங்கிட்டு இருப்பே... உன்னை பாத்தா எனக்கே பாவமா இருக்கு.." - அப்படின்னு பக்கத்து வீட்டு கழுதை இந்த கழுதை  கிட்ட   சொல்லுச்சாம்...
               அதுக்கு இந்தக் கழுதை என்ன சொல்லுச்சாம் தெரியுமா..?
             '' நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் கேனையன் கிடையாது... என் முதலாளிக்கு ஒரு அழகான பொண்ணு இருக்கா... அவளுக்கு ஒரு முறைப் பையன் இருக்கான்... ஒரு நாளு அந்த பையன் என் முதலாளிகிட்ட வந்து பொண்ணு கேட்டான்... முதலாளிக்கு கோபம் வந்துடுச்சி... இந்தக் கழுதைக்குக் கட்டிக்கொடுத்தாலும் கட்டிக்கொடுப்பேனே தவிர உனக்குக் கட்டித்தர்மாட்டேன்னு சொல்லிட்டாரு.... அதுக்குத் தான் நான் அவரு கொடுக்கிற அடியெல்லாம் வாங்கிகிட்டு இருக்கேன்...''  - அப்படின்னு சொல்லுச்சான்...
             அதுக்கு அந்த கழுதை இந்தக் கழுதைய பாத்து ''அட... கேணப்பயலே'' - ன்னு சொல்லி தலையில அடிச்சிகினு திரும்பப் போயிடுச்சாம்...
           கதை எப்படி இருக்குங்க... நல்ல இருக்கா.... அந்த அடி வாங்குற கழுதைக்கும் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க... சம்பந்தமிருக்குன்னு நீங்க சொன்னீங்கனா நான் பொறுப்பு இல்லைங்க.... 
             அழகான பொண்ணுக்கு ஆசைப்பட்டு அந்தக் கழுதை தன் முதலாளி கொடுக்கிற அடியெல்லாம் வாங்கிகொள்கிற மாதிரி,  ஜெயலலிதா கொடுக்கிற இலவசப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அவங்கக் கொடுக்கிற அடியெல்லாம் இந்த ஜெனங்க வாங்கிகிட்டு இருக்காங்க... பால் விலை உயர்வா... கொடுங்க வாங்கிக்கிறேன்...  பஸ் கட்டண உயர்வா கொடுங்க வாங்கிக்கிறேன்... மின் வெட்டா கொடுங்க வாங்கிக்கிறேன்... மின் கட்டணம் உயர்வா... கொடுங்க வாங்கிக்கிறேன்... இதுக்கு பதிலா இலவசங்களை அள்ளிக்கொடுங்க வாங்கிக்கிறேன்னு.... இந்த அரசு கொடுக்கிற அடியெல்லாம் வாங்கிக்கிட்டு இருக்காங்கன்னு யாரோ சொல்லுறது என் காதில உழுதுங்க... இருந்தாலும் இந்த கதைக்கும் இந்த மக்களுக்கும் சம்பந்தமில்லைங்க...!

கருத்துகள் இல்லை: