சனி, 28 ஏப்ரல், 2012

இருட்டோடு வாழ பழகி கொண்டார்கள் தமிழக மக்கள்...!

                சென்ற ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நான் ஆட்சிக்கு வந்தால் என் தலைமையிலான அரசு மின்வேட்டினை முற்றிலுமாக விலக்கிக்கொள்ளும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு கொடுத்து தான் செல்வி. ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறார்.  ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடியப்போகிறது. ஆனால் இன்னும் இன்று வரை மின்வெட்டு விலக்கிக்கொள்ளப்படவில்லை என்பது மட்டுமல்ல. மின்வெட்டின் நேரம் அதிகரிப்பு செய்தது தான் இவர் செய்த சாதனை. தமிழகம் முழுதும் பாரபட்சமில்லாமல் பன்னிரெண்டு மணி நேரம் வரை மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.
                  இதில் அண்மையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வேறு நடந்தது. அந்த சமயத்தில் கூட இந்த தேர்வு எழுதும் குழந்தைகளுக்குக் கூட இந்த அரசு இரக்கம் காட்டவில்லை. வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மின்வெட்டு நேரத்தில் காற்றில்லாமல் அவதிப்படுகிறார்கள். இதில் இப்போது கடுமையான கோடை வேறு. சுவையாய் சாப்பிடுவதற்கு மிக்சி போடமுடியவில்லை. கிரைண்டர் போடமுடியவில்லை. மக்களது பொன்னான பன்னிரெண்டு மணி நேரத்தையும் விழுங்கிக் கொண்டிருந்த தொலைகாட்சியை பார்க்க முடியவில்லை. இளைஞர்கள் கம்ப்யூட்டரில் பேஸ்புக்கில் தன் நண்பர்களோடு உறவாட முடியவில்லை. இப்படி தான் மின்வெட்டால் அன்றாடம் எவ்வளவோ அல்லல்களும், எரிச்சல்களும் மட்டுமே  ஒவ்வொரு வீட்டிலும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
                அனால் தமிழக மக்களிடையே இதுவரை எந்த ஒரு முணுமுணுப்போ அல்லது  சலசலப்போ ஏற்படவில்லை. இதற்காக போராடவேண்டும் - எதிர்ப்புக்குரல் கொடுக்கவேண்டும்  என்கிற எண்ணம் கூட இந்த  மக்களுக்கு வரவில்லையே என்பது தான் வியப்பாக இருக்கிறது.  மின்வெட்டோடும், இருட்டோடும் தமிழக மக்கள் பழகி விட்டார்கள் என்பது தான் அதற்கு காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. 
                    
மின்வெட்டால் தமிழக வீடுகளில் மாற்றங்கள்...           
        ஆனால் இந்த மின்வெட்டால் தமிழக வீடுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்திருக்கிறது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏனென்றால், தமிழக மக்கள் இருபது ஆண்டுகளுக்கு பின்னால் சென்றிருக்கிறார்கள் என்பதை தான் நாம் ஒவ்வொரு வீட்டிலேயும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
           ஆம்... தமிழக வீடுகளில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தைகள் என்ற உறவுகள் மேம்பட்டிருக்கிறது. மின்வெட்டினால் தொலைகாட்சி சீரியல்கள் ஆக்கிரமித்த நேரங்களில் எல்லா வீடுகளிலும் குடும்பமாக - கூட்டமாக உட்கார்ந்து பேசுகிறார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளமலும் - பேசிக்கொள்ளாமலும், சீரியல் ஒரு பக்கம், பேஸ்புக் ஒரு பக்கம் என்று குடும்பம் பிரிந்திருந்த நிலை மாறி, இன்று எல்லோரும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பிள்ளைகள் என அனைவரும் கூடிப் பேசுகிறார்கள். ஒன்றாக கூடி ரசித்தும், ருசித்தும், பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் சாப்பிடுகிறார்கள். இரவு நேரங்களில் அநேகமாக எல்லா வீடுகளிலும் ''candlelight dinner'' தான். அல்லது மாடியில் ''நிலாச்சோறு'' சாப்பிடுகிறார்கள்.  இந்த புதிய அனுபவம் குழந்தைகளுக்கு பிடித்துப்போய்விட்டது. பெரும்பாலான பாட்டிகளும், அம்மாக்களும் குழந்தைகளையும், பெரியவர்களையும்  சுற்றி உட்கார வைத்து சாதத்தைப் பிசைந்து உருண்டையாக்கி கையில் கொடுத்து உணவருந்தச் செய்கிறார்கள்.  தொலைகாட்சி  சீரியலினால் சிரிப்பைத் தொலைத்த மக்கள் இப்போது ஒன்றாக கிண்டலும், கேலியும், கதையுமாக பேசிப்பேசி சிரிக்கிறார்கள். தாத்தா - பாட்டிகள் அந்தக்கால கதைகளையும், அனுபவங்களையும் தங்களின் பேரக்குழந்தைகளுக்கு சொல்லிச்சொல்லி மாய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
            இப்போது தான் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட விளையாட்டுகளான கேரம், செஸ், சீட்டுக்கட்டு, பல்லாங்குழி, சில்லு போன்ற விளையாட்டுகள் எல்லாம் உயிர்பெற்றிருக்கின்றன. தெருக்குழந்தைகள் எல்லோரும் ஒன்று கூடி விளையாடுகிறார்கள். மின்வெட்டு நேரத்தில் காற்றில்லை என்று வெளியே வந்து உட்காரும் போது தான் பக்கத்து வீட்டிலிருப்பவர்களும், எதிர்வீட்டிலிருப்பவர்களும் நம் மக்களின் கண்களுக்கு தெரிகிறது. மீண்டும் நட்பு தழைக்கத் தொடங்கியிருக்கிறது.
             இருபது ஆண்டுகளுக்கு முன்பு எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்பட்ட அம்மி, உரல், பனை ஓலை விசிறி எல்லாம் இப்போது மீண்டும் புதிய விருந்தாளிகளாக பல பேர் வீட்டுக்குள்ளே நுழைந்திருக்கின்றன என்பதும் ஒரு நல்ல மாற்றமே.
               இப்போது தமிழக மக்களிடையே மின்வெட்டு என்பது ஒரு சந்தோஷமான நிகழ்வாக மாறிவிட்டது. ஒரு வேலை மின்வெட்டு விலக்கிகொள்ளப்படுமேயானால் தமிழக மக்கள் சமீப காலமாக பெற்ற இந்த சந்தோஷங்களை எல்லாம் இழப்பார்கள்.

கருத்துகள் இல்லை: