செவ்வாய், 29 மே, 2012

பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு - மத்திய மாநில அரசுகளின் வக்கிரபுத்தி...!

             கடந்த ஒரு வாரமாகவே புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் பெட்ரோல் - டீசல்
தட்டுப்பாடு என்பது மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதியோடு பெட்ரோலின் விலையை லிட்டருக்கு  7ரூபாய் 50 காசு உயர்த்தியது. இந்த விலையேற்றம் என்பது முன்னெப்போதும் செய்யாத அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பதால், மக்கள் மத்தியில்  மத்திய அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தை உண்டுபண்ணியது. மக்கள் ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்திக்கு உள்ளாகினர் என்பது
கண்கூடாக பார்த்த உண்மை. பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து தலைமை அறிவிப்பதற்கு முன்பே பல அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் ஆங்காங்கே கூட்டாகவும், தனித்தனியாகவும் போராட்டங்களை நடத்தினர் என்பதும் நாம் கண்ட உண்மை.
             மக்களின் அதிருப்தியையும், கோபத்தையும் புரிந்து கொண்ட மத்திய - மாநில அரசுகள் ஒரு தந்திரத்தை பயன்படுத்தினர். அது தான் இருக்கோடுகள் தத்துவம். போடப்பட்ட ஒரு கோட்டை சிறியதாக்க வேண்டுமென்றால், அதன் பக்கத்தில் அதைவிட  பெரியக் கோட்டை போட்டால், முதலில் போட்ட கோடு என்பது சிறியதாகிவிடும். அது போல் தான்  இந்திய மக்கள் பெட்ரோல் விலை உயர்வினால் பெரும் அல்லல்களுக்கும், துயரங்களுக்கும், கஷ்டங்களுக்கும் உள்ளாகி அவதியுறும் போது, அவர்களுக்கு  அதை விட பெரிய கஷ்டத்தை கொடுத்து அவதிப்பட செய்தால் முதலில் கொடுத்த கஷ்டம் சிறியதாகிவிடும் என்கிற வக்கிரபுத்தியோடு தான் மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து செயற்கையாகவே பெட்ரோல் - டீசல்    தட்டுப்பாட்டை உருவாக்கி வேடிக்கைப் பார்க்கிறார்கள் என்பதும் விலை அதிகமாக கொடுத்தாலும் பரவாயில்லை. எனக்கு பெட்ரோல் கிடைத்தால் போதும் என்கிற நிலைமைக்கு    மக்கள்  தள்ளப்பட்டிருக்கிறார்கள்   என்பதும் தான் உண்மை.
              மத்திய - மாநில அரசுகளின் இந்த செயல்  பொறுப்பற்றத் தன்மையையும், வக்கிரபுத்தியையும்  தான் காட்டுகிறது. ஆட்சியாளர்களின் இந்த செயல் என்பது அந்தக் கால சினிமா வில்லன்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஒரு பெண்ணின் குழந்தையை கையில் பிடித்துக்கொண்டு, நான் சொல்வது போல் உன்னை எனக்கு விருந்தாக்கவில்லை என்றால் உன் குழந்தையை சாகடித்து விடுவேன் என்று சொல்லி மிரட்டியே அந்த பெண்ணை அனுபவிக்கும் சினிமா வில்லன்களின் வக்கிரபுத்தி தான் நம் நினைவுக்கு வருகிறது. இந்த செயலுக்கும் ஆட்சியாளர்களின் இன்றைய செயல்களுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

கருத்துகள் இல்லை: