செவ்வாய், 31 ஜூலை, 2012

''பங்குச்சந்தை'' சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சர் ஆனார்...!

     
   மத்தியில் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த பிரணாப்முகர்ஜி குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் நம்ப ''பங்குச்சந்தை'' சிதம்பரம் மீண்டும் மத்திய நிதியமைச்சர் ஆனார். ''சிதம்பரம் ஒரு திறமை வாய்ந்த நிதியமைச்சர்'' என்று  அமெரிக்க பிணந்தின்னிகளால் வாயாரப் பாராட்டப்பட்டவர். சும்மா சொல்லக்கூடாது. அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள பொதுத்துறைகளையும், பொதுத்துறைப் பங்குகளையும் அமெரிக்க முதலாளிகள் வாங்குவதற்கு ''தரகு'' வேலைகளைப் பார்த்திருக்கிறார்.  சென்ற முறை முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே நான்கு ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்தார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு மட்டுமே பாராளுமன்ற அவைக்கு வருவார். ஆனால் அதன் பிறகு  பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி சம்பந்தமாக  - பட்ஜெட் சம்பந்தமாக  கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குக் கூட பாராளுமன்ற இரு அவைகளுக்கும் வரமாட்டார். உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவரது இணையமைச்சர் பதில் சொல்லுவார் அல்லது சிதம்பரமே தன் அலுவலகத்தில் இருந்தப்படியே எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பார்.  தப்பித்தவறிக்கூட அவைக்குள்ளே நுழைய மாட்டார்.  காரணம் இந்திய - அந்நிய பெருமுதலாளிகளோடு இந்திய அரசு நிறுவனங்களின் விற்பனை சம்பந்தமாக உரையாடிக்கொண்டிருப்பார். இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, இந்திய மக்களின் சம்பளத்தை வாங்கிக்கொண்டு - அமெரிக்காவிற்கு எஜமான விசுவாசம் காட்டும் பணிகளை மட்டும் தான் செய்துகொண்டிருப்பார். ஒட்டு மொத்தமா சொல்லனும்னு சொன்னா... இந்த தேசத்தை பங்குப்போட்டு விற்கும் ''தரகு'' வேலையை மட்டும் தான் செய்வார். 
             அது மட்டுமா... செய்வாரு... தன் மகன் கார்த்திக் சிதம்பரம் கோடிகோடியாய் சம்பாதிப்பதற்கு பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் போன்ற  வழிமுறைகளை ''ஏற்பாடு'' செய்து  கொடுப்பார். அதுவும் நிதி அமைச்சர்ன்னா இந்த ''வேலைக்கெல்லாம்'' ரொம்ப வசதியா போச்சி. உலகத்திலேயே ''சிறந்த அப்பா'' டாப் -10 வரிசையிலே  கருணாநிதிக்கு அடுத்து இவர் தான் ''சிறந்த  அப்பா'' என்று சொன்னால் தப்பில்லைங்க.
                இப்படிப்பட்டவரைத் தான் 2008 - ஆம் ஆண்டில இந்தியாவில் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின்  அச்சுறுத்தல் அதிகமானதாலேயும், நாட்டில் அமை குலைந்ததனாலேயும்  உள்துறை அமைச்சராக ஆக்கினாங்க. அங்கேயும் தனது பணிகளை  கச்சிதமாக தான் செய்தார். 2009 - ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் அமெரிக்க உளவுத்துறையான  சி. ஐ. ஏ - வின் தலைவரை இந்தியாவிற்கு வரவழைத்தாருங்க. தேர்தல் பற்றிய பேச்சுகளை அமெரிக்க உளவுத்துறையோடு நடத்தினார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வேலைகளை செய்வதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும்  அமெரிக்க உளவுத்துறையையும், இந்தியாவில் பணியிலிருந்த அமெரிக்க தூதரையும், துணைத் தூதரையும் துணைக்கு வைத்துக்கொண்டார். சிதம்பரம்  சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவதற்கே இவர்கள் உதவி தேவைப்பட்டது.
           இப்படிப்பட்டவர் தான் 2009 - பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னரும், மீண்டும் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால்,சிதம்பரத்தைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சகப் பொறுப்பில்  இருந்த இன்றுவரை, சர்ச்சைகளை மட்டும்   தான் அதிகம் சந்தித்திருக்கிறார். மத்திய அரசு எதிர்ப்பார்த்தது போல் அமைதி  கிடைக்கவில்லை  மாறாக நாட்டில் அமைதி குலைந்தது தான் மிச்சம். இந்த காலங்களில்  . வடமாநிலங்களில் மாவோயிஸ்டுகள் வளர்ச்சியடைந்தனர். மாவோயிஸ்ட்டுகளால்  வடமாநிலங்களில்  ஆள் கடத்தல் - கொலை போன்ற  தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மக்கள் ஆளானார்கள்.   அதனால் மக்களால் அமைதியான வாழ்க்கை நடத்தமுடியவில்லை. அதேப்போல் இந்த காலக்கட்டத்தில்  வடகிழக்கு மாநிலங்களிலும் மாவோயிஸ்டுகள் வேரூன்றத் தொடங்கினார்கள்.
           அதேப்போல், தீவிரவாதிகளையும் மாவோயிஸ்ட்டுகளையும் அடக்கப்போவதாகச் சொல்லி   தேசிய அளவிலான ''பயங்கரவாத தடுப்பு மையம்'' அமைக்க துடித்துக்கொண்டிருந்தார். ஆனால் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களின் எதிர்ப்பால் அது முடியாமல் போனது, அசாம் இன மோதலை ஆரம்பத்திலேயே  தடுக்க முயற்சிச் செய்யாமல் அதை வளர விட்டது. இவ்வாறு ஒரு உள்துறை அமைச்சராக பல ''சாதனைகளை'' படைத்தவர் தான் இந்த ப - பங்குச்சந்தை சிதம்பரம்.
           அதுமட்டுமல்ல, ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்த போது  ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆ. ராசாவுடன் சேர்ந்து இவரும் முறைகேடுகளில்  ஈடுபட்டதற்கான  குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் இருக்கின்ற இப்படிப்பட்ட  சூழ்நிலையில் தான் இந்த ப. சிதம்பரம் நிதி அமைச்சராக ஆக்கப்பட்டிருக்கிறார் என்பதும்,
             முன்பு இவர் நிதி அமைச்சராக இருந்த போதும் நாட்டின் பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்தல... தற்போது உள்துறை அமைச்சராக இருந்த போதும் உள்நாட்டு பாதுகாப்பையும் தூக்கி நிறுத்தல... இப்படிப்பட்டவரைத் தான் நாட்டின் பொருளாதர நிலை மோசமாக இருக்கும் தற்போதைய  சூழ்நிலையில் தான் ப. சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சராக ஆக்கப்பட்டிருக்கிறார் என்பது மக்களுக்கு ஆச்சரியமோ ஆச்சரியமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை: