வியாழன், 22 நவம்பர், 2012

420 ஆண்டு பாரம்பரியத்தை சிதைக்கும் மதவெறி அமைப்புகள்...!

          420 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சார்மினாரின் பாரம்பரியத்தை சிதைக்கும் விதமாக அதன் அருகிலேயே இந்துக் கோவில் கட்டப்பட்டிருப்பது குறித்தும், அதனால் ஏற்படும் சர்ச்சை குறித்தும் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 4 கூம்பு கோபுரங்களை கொண்ட சார்மினார் கட்டுமானத்திற்கு அருகே, மிகச்சிறிய அளவிலான பாக்யலட்சுமி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில், பழமை வாய்ந்தது என்று இந்து அமைப்புகள் கூறினாலும், 60 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சார்மினாரின் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதில், இந்த பாக்யலட்சுமி கோவில் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்குள் திடீரென முளைத்த இக்கோவிலைச் சுற்றி காவிக்கொடிகள் சார்மினாரின் பாரம்பரியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. கோவில் நிகழ்ச்சியின் போது, அங்கு போடப்படும் தார்பாலின் பாய் சார்மினார் கட்டிடத்தில் சேர்த்து கட்டப்படுகிறது. இதனால் சமீபத்தில் இது குறித்து சர்ச்சை எழுந்து, பதற்றம் ஏற்பட்டது.  இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. அந்த வழியே செல்லும் மக்களும் தாக்கப்பட்டதுடன் கடை களும் நொறுக்கப்பட்டன.          சார்மினார் விவகாரத்தில், ஆந்திராவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மஜிலிஸ்-எ-இதாதுல்-முஸ்லீமின் (எம் ஐ எம்) கட்சி மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது. சார்மினார் பாரம்பரியம் பாதிக்கப்படக்கூடாது என போராட்டத்தை முன்னின்று நடத்தும் அமைப்பாக எம்.ஐ.எம் உள்ளது. ஹைதராபாத்தின் பாரம்பரிய கட்டிடம் சிதைக்கப்படுவது குறித்து, எதிர்த்து பேச யாரும் தயாராகாத நிலையில் இந்து அமைப்புகள், அந்த இடத்தை ஆக்கிரமிப்பதில் தீவிரம் காட்டுகின்றன. சார்மினாரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியத் தொல்லியல் துறைக்கு உள்ளது. 1951ம் ஆண்டு முதல் இந்த நானூறு ஆண்டு கட்டிடம், தேசிய நினைவுச் சின்னமாக ஆனது. ஹைதராபாத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க இந்திய தொல்லியல் துறை தவறியுள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படம் எடுக்கப் பட்ட சார்மினார் கோபுர வடிவத்தை பார்க்கும், அந்த கால கட்டத்தில் பயன் படுத்தப்பட்ட கார்கள் சாலையில் ஓடுவதை காண முடிகிறது. அந்த புகைப்பட ஆதாரம் மூலம் சார்மினார் அருகே பாக்யலட்சுமி கோவில் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. பழமையான வழிப்பாட்டுத் தலம் என இந்து அமைப்புகள் கூறும் வாதம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. மிகச்சிறிய அளவில் வைக்கப்பட்ட பாக்யலட்சுமி கோவில் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து தனது, கட்டிடப் பகுதியை விரிவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கோவிலால், சார்மினாருக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல் நீடிக்கவே செய்கிறது.

நன்றி : The Hindu
தமிழாக்கம் : தீக்கதிர் 

1 கருத்து:

துளசி கோபால் சொன்னது…

உள்ளே தரைத் தளத்தில் ஒரு மூலையில் சின்னதா ஒர் தர்க்கா. அங்கே மயில்பீலிக் கொத்தும் சாம்பிராணியுமா வழிபாடு நடக்குது. வேண்டாத வேலையா இதுக்கு வெளிப்புறம் தெருவைப் பார்த்தமாதிரி ஒரு ஹிந்துக் கோயில் (பாக்யலக்ஷ்மி கோவிலாம்) காவிக் கொடிகளோடு யாரோ(????) உண்டாக்கி(!!!!) வச்சுருக்காங்க (-:

மேற்படி பாரா.... என்னுடைய பதிவில் மூன்று வருசங்களுக்கு முன் எழுதியது.

தேவைதானான்னு இருந்துச்சு, கோவிலைப் பார்த்தவுடன்:(

முழுப்பதிவும் இங்கே:

http://thulasidhalam.blogspot.co.nz/2009/11/blog-post_16.html