சனி, 15 டிசம்பர், 2012

கோவணத்தையும் உருவப் போறாராம் மன்மோகன் சிங்... ஜாக்கிரதை...!

                       இன்றைக்கு புதுடெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு FICCI ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் மன்மோகன் சிங் ஒரு ''அபாய சங்கை'' ஊதியிருக்கிறார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தக் கொள்கைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமாம். அதுவும் வேகமாக நடைமுறைப்படுத்தப்படுமாம். அப்படின்னா என்ன அர்த்தம்...?ஜெனங்க கொஞ்ச நெஞ்சம் போட்டிருக்கிற கோவணத்தையும் உருவிடுவாருன்னு அர்த்தம். ஜெனங்களை ஒட்டுத் துணி இல்லாம அலையவிட்டுடுவாருன்னு அர்த்தம். தனது அமெரிக்க எஜமான் இட்ட கட்டளைய சிறப்பா செய்யப்போறாருன்னு அர்த்தம். அப்படின்னா இதற்கு பேரு தான் சீர்த்திருத்தமா...?
         உண்மையிலேயே சீர்த்திருத்தம் என்றால் என்ன...? அம்மணமா அலைந்தவனை ஆடை அணிய சொல்லுறது ஒரு வகை சீர்த்திருத்தம். குழந்தைத் திருமணம் கூடாதுன்னு தடுக்கிறது ஒரு வகை சீர்த்திருத்தம். கணவன் இறந்துட்டா மனைவி உடன்கட்டை ஏறி உயிர் துறப்பதை ஒழித்து கட்டியது என்பது ஒரு வகை சீர்த்திருத்தம். சமூக விடுதலை, பெண் விடுதலை - இவைகளுக்காக போராடுவது என்பது கூட ஒரு வகை சீர்த்தித்தம் தான். இதெல்லாம் சமூக சீர்த்திருத்தம்.
             அனால் மன்மோகன் சிங்கோ சொல்லுவது ''பொருளாதார சீர்த்திருத்தமாம்''. அப்படி என்ன பொருளாதார சீர்த்திருத்தம் செய்யப்போறாரு என்று கேட்டால், பெட்ரோல் - டீசல் - சமையல் காஸ் விலைகளை மனசாட்சியே இல்லாம உயர்த்த போறாருங்க.  நாம் அன்றாடம் பயன்படுத்துற பருப்பு, சமையல் எண்ணெய், மளிகை சாமான்கள், காய்கறிகளின் விலைகளை தாறுமாறாக உயர்த்த போறாருங்க. கண்டபடி வரிவிதிப்புகள் இருக்கும். ஜெனங்க கட்ட வேண்டிய வங்கி வட்டிகளை அதிகப்படுத்திடுவாரு. ஜெனங்களுக்கு கொடுக்கவேண்டிய வட்டிகளை குறைச்சிடுவாரு. மக்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய மானியத்தை வேட்டிடுவாரு.   வேலையின்மையும், வேலையிழப்பும் அதிகமாகும். மக்களுக்கு சொந்தமான பொதுத்துறைப் பங்குகளை தயக்கமே இல்லாமல் தைரியமாக வித்துடுவாரு. இப்படியாக ஜெனங்கப் போட்டிருக்கக்கூடிய சட்டை, துண்டு, வேட்டி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உருவிட்டு, கடைசியாக ஜெனங்களுக்கு ஏதாவது போக்குக்காட்டிட்டு அவங்க போட்டிருக்க கோவணத்தையும் உருவிடுவாரு. அதுமட்டுமல்ல.... இன்னொரு பக்கம் பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகையை தாராளமாக தருவாரு. அதுமட்டுமா... மானியங்களை அவர்களுக்கு கொட்டிக்கொடுப்பாரு. ஒரு பக்கம் ஜெனங்க மேல மிகப்பெரிய சுமையை தூக்கி வைப்பாரு. இன்னொரு பக்கம் பெருமுதலாளிகளை குஷிப்படுத்திடுவாறு. இதற்கு பேரு தான் பொருளாதார சீர்த்திருத்தமாம். மன்மோகன் சிங் சொல்லுறாரு. இப்படி செய்தால் தான் நாட்டில அவர் ''எதிர்பார்க்கிற'' பொருளாதார வளர்ச்சி இருக்குமாம்.
         இதை மட்டும் சொல்லலைங்க.   இதுவரையில் அரசு மேற்கொண்ட ''பொருளாதார சீர்திருத்த'' நடவடிக்கைகள் ஒரு தொடக்கம் தானாம்.  இன்னமும் ஏராளமான ''சீர்திருத்தக் கொள்கைகள்'' நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கிறதாம்.  அப்படி செய்தால் மன்மோகன் சிங்கை ''ஒரு செயல்படும் பிரதமர்ன்னு'' அமெரிக்கா  ஒத்துக்குமாம். இன்னுமொரு பொன்மொழியை மன்மோகன் சிங் உதிர்த்திருக்கிறார். இந்த மாதிரியான ''பொருளாதாரச் சீர்திருத்தங்களை'' எதிர்க்கக் கூடியவர்கள் ''பழமைவாதிகளாம்''. யாரை சொல்கிறார் என்று புரிகிறதா....? மக்களை பாதிக்கின்ற - மக்கள் மீது சுமையை ஏற்றுகின்ற - ஏழை மக்களை மேலும் ஏழ்மை ஆக்குகின்ற இதுபோன்ற ''முட்டாள்தனமான'' பொருளாதாரச் சீர்த்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இடதுசாரிகள். தான் என்பதை நாடு மறந்துவிடக்கூடாது. பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளிக்கொடுத்து, அவர்களை மேலும் செழிக்கச் செய்யும் ''தறுதலைத்தனமான'' பொருளாதாரச் சீர்த்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதை நாடு மறந்துவிடக்கூடாது.
          அப்படியென்றால் பிரதமர் மன்மோகன் சிங் இதன் மூலம் என்ன திருகு வேலை செய்கிறார் என்றால்.... ''மக்களுக்காக நான் சீர்த்திருத்தம் செய்யப்போறேன். அதை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. அப்படியென்றால் அவர்கள் உங்களுக்கு எதிரானவர்கள்'' என்று சொல்லாமல் சொல்லி, வெறும் இலவசங்களுக்கும், தொலைக்காட்சி சீரியல்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் மயங்கிப்போன சிந்தனை இல்லாத இந்திய மக்களை இடதுசாரிக்கட்சிகளுக்கு எதிராக திருப்புவதற்கான திருகு வேலையையும் மன்மோகன் செய்திருக்கிறார்.
          ''பொருளாதார சீர்த்திருத்தம்'' என்ற பெயரில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு செய்யும் மோசடி வேலைகளை மக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது தான் நமது கேள்வி...? 

கருத்துகள் இல்லை: