சனி, 29 டிசம்பர், 2012

இப்படியுமொரு கண்ணியமிக்க அரசியல் கட்சியைப் பாருங்கள்...!


              கடந்த இரண்டு நாட்களாக மேற்கு வங்க மாநிலத்திலிருந்து இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் உதிர்த்த பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கருத்துக்கள் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
              பத்து நாட்களுக்கு முன்பு புதுடெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த மிகப்பயங்கரமான பாலியல் வன்முறைக்கு எதிராக இந்தியா கேட் அருகில் நடைபெற்றப் போராட்டத்தில் கலந்து கொண்ட  இளம் பெண்களையும், வயதில் மூத்தப் பெண்களையும் பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம். பி. அபிஜித் முகர்ஜி பேசியது என்பது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் இப்படி பேசியதற்காக அவர் சார்ந்திருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியோ வெட்கப்படவில்லை. வேதனைப்படவில்லை. பெண்களை அப்படி தரக்குறைவாகப் பேசிய அபிஜித் முகர்ஜி மீது கோபமும் படவில்லை.  காரணம் அவர் வேறு யாரும் இல்லை. இந்த நாட்டின் முதல் குடிமகனின் தவப்புதல்வன் என்பது தான்.  இதில என்ன வேடிக்கை என்றால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூட தவறு செய்த தன் மகனை கண்டிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை. அதுமட்டுமல்ல, இப்படி பேசியதற்காக அபிஜித் முகர்ஜி இதுவரை வருத்தம் தெரிவிக்கவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ முயற்சி கூட  செய்யவில்லை. மாறாக இப்படி பேசியதற்காக காங்கிரஸ் கட்சியும், அவரது சகோதரியும் வருத்தம் தெரிவித்தார்கள்.  இப்படியும் கண்ணியமான ஒழுங்கீனமான அரசியல் கட்சி. அதிலும் மத்தியில் ஆளும் கட்சி. வெட்கக்கேடு. இவர்களுக்கு ஓட்டுப் போட்டதற்காக நாமெல்லாம் தலைகுனிய வேண்டும்.
           இதேப்  போல் நேற்று முன் தினம் மேற்குவங்க மாநிலத்திலேயே நடைபெற்ற இன்னொரு சம்பவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பேரணியொன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், இடது முன்னணியின் சட்டமன்றக்குழு துணைத்தலைவருமான அனிசூர் ரகுமான் பேசும் போது அந்த மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜியை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இதற்கு காரணம் மேற்குவங்க  மாநில சட்டமன்றத்திலும், வெளியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும்  தோழர்களுக்கும் எதிராக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து எடுத்துவரும் நடவடிக்கைகளாலும், மம்தா பானர்ஜி கட்சி குண்டர்களின் தாக்குதல்களாலும் உண்டான கோபத்தின் வெளிப்பாடு தான் அவரை அவ்வாறு பேசவைத்திருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும் அது கண்டிக்கத் தக்கதே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தன் கட்சித் தோழரையே தொலைக்காட்சியில் பொதுமக்கள் மத்தியில் ''நமக்கு எதிரான ஒரு பெண் முதல்வரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டுமே தவிர பாலியல் ரீதியாக அல்ல. அவ்வாறு அவரை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்திப் பேசியது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது'' என்றும், அவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் பேசியது என்பது வித்தியாசமாக இருந்தது. அதுமட்டுமல்ல அவ்வாறு பேசிய அனிசூர் ரகுமானை கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அவருக்கும் எச்சரிக்கைக் கடிதமும் அளித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவ்வாறு பேசியதற்காக அனிசூர் ரகுமான் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடமும், மக்களிடமும் மன்னிப்புக் கேட்டார்.
           இப்படிப்பட்ட கண்ணியமும், ஒழுக்கமும், நேர்மையும் இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிகளிடமும் பார்க்க முடியாது என்பது தான் என் தாழ்மையான கருத்து. அதிலும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலான திராவிடக்கட்சிகளின் ஆட்சி என்பதும், வளர்ச்சி என்பதும் தமிழக சட்டமன்றத்திலும், வெளியிலும் எதிர்க்கட்சியிலிருக்கும் பெண் தலைவர்களையும், பெண் உறுப்பினர்களையும் பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்திப் பேசுவது தான் வழக்கமாக பார்த்திருக்கிறோம். அப்படிப் பேசுவது தான் இந்தக் கட்சிகளின் தலைவர்களின், பேச்சாளர்களின்  திறமையாகவும் வீரமாகவும் காட்டித் தான் இவர்கள் தங்கள் கட்சிகளை வளர்த்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்கு தெரியும்.
            இந்தியாவில் இப்படிப்பட்ட அசுத்தமான, ஒழுங்கீனமான கட்சிகளுக்கு மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுக்கமான, கண்ணியமான கட்சியாக காட்சியளிக்கிறது.

கருத்துகள் இல்லை: