சனி, 9 மார்ச், 2013

பதவி ஓய்வு - பணியின் தொடக்கம் - ஒரு மாறுபட்ட நீதிபதி கே. சந்துரு....!

           அவரைப் பற்றிப் பாராட்டிப் பேச ஆயிரம் விசயங்கள் உண்டு. ஆனால் அதைப் பேச விடவில்லை அவர். “சம்பிரதாய வழியனுப்பு நிகழ்ச்சி எதுவும் நடத்த வேண்டாம்,” என்று கேட்டுக்கொண்டார். வழியனுப்பு விழாக்கள் எப்படி ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன எனக் குறிப்பிட்டு, தனக்கு அத்தகைய விழா தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுத்துப்பூர்வமாகவே தெரிவித்தார். தாம் பதவி ஓய்வுபெறும் நாள் வழக்கமான ஒரு நாளாகவே இருக்க வேண்டும் என்று விரும்பி, அப்படியே அன்பான கைகுலுக்கல்களோடு வெள்ளியன்று (மார்ச் 8) விடைபெற்ற அவர் நீதிபதி கே. சந்துரு. 2009 நவம்பர் 9 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற அன்று அவர் செய்த செயல் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. தனது சொத்துக்கணக்கு ஆவணங்களை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார். அன்று அவர், பதவிக் காலம் முடிவதற்குள் 1லட்சம் வழக்குகளை முடித்துவிட விரும்புவதாகத் தெரிவித்தார். ஓய்வு பெறும் நாளில் கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கையைத் தொட்டுவிட்டார்.
          “அவர் ஒரு வழக்கை அனுமதிப்பதற்கான விசாரணைக்கு வரும்போதே அதைப் பற்றி முழுமையாகப் படித்துவிட்டு வருவார். ஆகவே நீதிமன்ற நடைமுறையில் தாமதம் ஏற்படாது. அண்மையில் உடல் நலம் குன்றியபோது தவிர்க்க இயலாத நிலையில் விடுப்பு எடுத்தார். மற்றபடி விடுப்பு எடுப்பதில்லை. இத்தகைய அவரது அணுகுமுறைகளைப் பார்த்த நாங்கள், இந்த லட்சிய எண்ணிக்கையை அவர் எளிதாக எட்டிவிடுவார் என்று ஊகித்தோம். அதுதான் நடந்திருக்கிறது,” என்கிறார் ஒரு மூத்த வழக்கறிஞர். பிரிட்டிஷ் காலத்திய மரபுப்படி உயர்நீதிமன்ற நீதிபதியை வழக்கறிஞர்கள் “மை லார்டு” என்றே குறிப்பிடுவது இப்போதும் தொடர்கிறது. ஏற்கெனவே ஒரு சில நீதிபதிகள் இதை மாற்ற முயன்ற துண்டு. அவர்களோடு தாமும் சேர்ந்து கொண்டவராக, தம்மை “சார்” என்று அழைத்தால் போதும் என்று வலியுறுத்தினார் சந்துரு. அதே போல், தாம் நீதிமன்றத்திற்குள் வருகிறபோது தமது வருகைiயை ஒரு உதவியாளர் (டவாலி) அறிவித்துக் கொண்டே வருவார் என்ற நடைமுறையையும் அவர் மாற்றினார். தமது அறையிலிருந்து தாமே சாதாரணமாக நீதிமன்றத்திற்கு வந்துசென்றார். நீதிபதி என்றால் காலில் ஷூ, சாக்ஸ் அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்ற வழக்கத்தையும் உடைத்து, செருப்பணிந்து வந்தார். தமது அறை வாசல் சுவரில், தம்மைப் பார்க்க வருகிறவர்கள் உரிய ஆவணங்களை மட்டுமே கொண்டுவர வேண்டுமேயன்றி பூச்செண்டு, பழம் போன்ற பொருள்களைக் கொண்டுவரக்கூடாது என்று அறிவிப்பையே ஒட்டிவைத்திருநதார். “இவரது பணிகளின் சிறப்பு என்ன வென்றால் மக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும், தொழிலாளர்கள தொடர்பான வழக்குகளிலும் சமூக அக்கறையோடு அணுகினார் என்பதே. தமிழ் மொழியில் அக்கறை, இலக்கிய ஆர்வம், அனைவருக்குமான கல்வி முதலிய ஈடுபாடுகள் அவரது அணுகுமுறைகளில் பிரதிபலித்தன” என்று மற்றொரு வழக்கறிஞர் குறிப்பிடுகிறார்.

ஒரு முக்கியத் தகவல்: 

        அவசர நிலை ஆட்சியின்போது நடந்த கொடுமைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி இஸ்மாயில் தலைமையிலான விசாரணைக்குழு முன்பாக, அன்றைய இளம் வழக்கறிஞரான சந்துரு மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் பங்கேற்று வாதங்களைப் பதிவு செய்தார். பதவி ஓய்விற்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்? “உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் அளித்த பல தீர்ப்புகள் தொகுக்கப்படாமலே இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து வெளியிட விரும்புகிறேன்” தம் நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயல்வார் என்று எதிர்பார்க்கலாம். அவ்வாறு தொகுக்கப்பட்டால் பல புதிய வழக்குகள் வருகிறபோது நீதிபதிகளுக்கு மட்டுமல்லாமல் வழக்கறிஞர்களுக்கும் பேருதவியாக இருக்கும். பணி ஓய்வு என்பது இவரைப்போன்றவர்களுக்கு வேறொரு பணியின் தொடக்கம்தான் அல்லவா?
 நன்றி : 

கருத்துகள் இல்லை: