சனி, 10 ஆகஸ்ட், 2013

நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது...!


கட்டுரையாளர் : P. ராஜீவ்          
                              நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்       
     ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களை செயல்படாது தடுத்திட மேற்கொள்ளும் முயற்சிகளும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணபலத்தின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதும், மக்களின் நியாயமான அபிலாசைகளைக் கருக வைத்திருக்கிறது. நாடாளுமன்றம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை, நாட்டு மக்களே ஒப்புயர்வற்றவர்கள் என்று மிகவும் கம்பீரமாகப் பறைசாற்றுகிறது. அவர்கள் தங்கள் ஒப்புயர்வற்ற நிலையினைத் தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இப்போதெல்லாம், நாடாளுமன்றம் செயல்படா நிலையே தலைப்புச் செய்திகளாக உள்ளது. அது உண்மையும் கூட. இதுவரையிலான இந்திய நாடாளுமன்ற மக்களவைகளிலேயே தற்போதைய 15-ஆவது மக்களவைதான், மிகவும் குறைந்த நாட்களே இயங்கிய ஒன்று என்கிற ‘வரலாறு’(?) படைத்துள்ளது.
      மக்களவை செயலகம் தயார்செய்துள்ள புள்ளி விவரங்களின்படி, 15-ஆவது மக்களவையின் 12-ஆவது அமர்வுவரை 1,157 மணி நேரம்தான் அமர்ந்திருக்கிறது. 14-ஆவது மக்களவையின் 1,736 மணி 55 நிமிடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் பின்தங்கிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் முதலாவது மக்களவை 677 நாட்கள் அமர்ந்து, தன்னுடைய 14 அமர்வுகளில் 3,784 மணி நேரம் இயங்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தின் மேலவை என்று கூறப்படும் மாநிலங்களவையிலும் நிலைமைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. வரலாற்றில் முதன்முறையாக, மாநிலங்களவை பட்ஜெட்டை எவ்வித விவாதமுமின்றி திருப்பி அனுப்பி இருக்கிறது. பல சட்ட முன்வடிவுகள் கிடப்பில்நாட்டில் ஜனநாயகத்தின் செயல்பாடு அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இது மட்டும் காட்டவில்லை. ஆட்சியாளர்கள் பல கொள்கை முடிவுகளை நாட்டின் ஒப்புயர்வற்ற அமைப்பான நாடாளுமன்றத்தைக் கலந்தாலோசிக்காமலேயே எடுத்துக்கொண்டிருக்கின்றன
ர்.
இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு, ‘ஆதார்’ (Aadhar)அட்டை வழங்குத லாகும். ‘ஆதார்’ அட்டை என்பது அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு அத்தியாவசியமான ஒன்று என்று கருதப்படுகிறது. ‘ஆதார்’ எண் இல்லாமல் ஒரு மாணவன் மத்திய, மாநில அரசு களிடமிருந்து எவ்வித உதவியும் பெற முடியாது. நேரடிப் பயன் மாற்றல் (Direct Benefit Transfer) என்னும் திட்டமானது ‘ஆதார்’ எண்ணையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
வங்கிக் கணக்குகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆதார் திட்டத்திற்கு சட்டரீதி யாக என்ன பின்னணி இருக்கிறது? ஆதார் அமலாக்கத்திற்கான சட்டமாக தன்னிகரற்ற அடையாள அட்டை சட்ட முன்வடிவு (UID bill - Unique Identification Bill) கருதப்படுகிறது. ஆனால், இச்சட்ட முன்வடிவின் பல ஷரத்துக்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய அறிக்கையில் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருந்தது. அரசாங்கம் நிலைக்குழுவின் ஆட்சேபணைகள் குறித்து, கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதனை முழுமையாக அப்படியே கிடப்பில் போட்டு வைத்துவிட்டது. இச்சட்டமுன்வடிவினை எந்த வடிவத்திலும் இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிட அரசாங்கம் முன் வரவே இல்லை. ஆனால், ‘ஆதார்’ ஏற்கனவே மக்களின் வாழ்க்கையில் எதார்த்தமான ஒன்றாக, ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் தன் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அரசாங்கத்தின் இத்தகைய திருட்டுத்தனமான அணுகுமுறையை அது, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்காகக் கொண்டுவந்துள்ள பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை (Contributory Pension Scheme) அறிமுகப்படுத்தியதிலும் பார்க்க முடியும். நம் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளும் தன்னுடைய ஊழியர்களிடமிருந்து ஓய்வூதிய நிதியாக கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக்கொண்டிருக்கின்றன.
       ஆனால், அது தொடர்பான சட்டமுன்வடிவு இன்னமும் நாடாளுமன்றத்தில் நிலுவையிலேயே இருந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இத்தனை ஆண்டு காலமாக இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு ஊழியர்களிடமிருந்து வசூலித்துக் கொண்டிருப்பதற்கான சட்டப்பூர்வமான நிலை என்ன? நாட்டு மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளை அரசாங்கமானது நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு இவை ஒருசில எடுத்துக்காட்டுகளேயாகும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டமானது, ஜனநாயக அமைப்பின் பல்வேறு அங்கங்களுக்கும் இருக்கின்ற அதிகாரங்கள் குறித்து மிகவும் தெளிவாக வரையறை செய்து தந்திருக்கிறது. நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது அது நாட்டின் சட்டமாக மாறுகிறது. நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளும் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்களாகிறார்கள். ஆனால், இத்தகைய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டளையையே ஆட்சியாளர்கள் மீறும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமே ஓரங்கட்டப்பட்டுவிட்டது 2012-13-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கையில், அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, கடந்தகால வரி நிலுவைகளை வசூலிப்பதற்காக, கடந்தகால வரிவிதிப்பு முறையை (retrospective taxation) அறிமுகப்படுத்தினார்.
       இச்சட்ட முன்வடிவினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருமனதாக நிறைவேற்றின. ஆனால், ப.சிதம்பரம் நிதியமைச்சரான பிறகு, காட்சிகள் மிக வேகமாக மாறின. இந்தப் புதிய வரிவிதிப்பு சீர்திருத்தத்தை ஆராய்வதற்காக ஒருநபர் குழுவை அமைத்தார். வரிகள் தொடர்பான வல்லுநர், பார்த்தசாரதி சோம், அறிக்கையைப் பெற்ற ஒரு வார காலத்திற்குள்ளாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட கடந்தகால வரி விதிப்புமுறை சட்டத்தை மூன்றாண்டு காலத்திற்கு அரசாங்கம் கிடப்பில்போடத் தீர்மானித்தது. நாட்டின் மிக ஒப்புயர்வற்ற அமைப்பான நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருமனதாக நிறைவேற்றிய ஒரு சட்டத்தை ஒரு வல்லுநர் ரத்து செய்ய முடியுமா? நாடாளுமன்றத்தின் குழுக்கள், ஒரு சிறிய அளவிலான நாடாளுமன்றம் என்றே கருதப்படுகின்றன. இக்குழுக்களில் அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகிப்பது வழக்கம். நன்கு வளர்ந்த ஜனநாயக நாடுகளில், நாடாளுமன்றக் குழுக்களின் முடிவுகளை நாடாளுமன்றம்தான் ரத்து செய்திட முடியும். ஆனால், இந்தியாவில் தான், நாடாளுமன்றக் குழு அளித்திட்ட பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ உரிமை பெற்றிருக்கிறது.
          ஒரு சட்டமுன் வடிவில் புதிதாக ஏதேனும் ஒரு பிரிவை அரசாங்கம் இணைக்கும்பட்சத்தில், மீண்டும் அச்சட்டமுன்வடிவு, பரிசீலனைக்காக நாடாளுமன்றக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், இதுநாள்வரை இவ்வாறு பின்பற்றப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்ட நடைமுறைக்கு முரணாக, இந்தியக் குடியரசின் வரலாற்றில் முதன்முறையாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக அரசாங்கம் ஒரு வல்லுநர் குழுவை அமைக்கிறது. நாம் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், நிதித்துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு நேரடி வரிவிதிப்புச் சட்டம் (Direct Tax Code) குறித்து தன் அறிக்கையை சமர்ப்பித்தபோது, நிதி அமைச்சகமும் உடனடியாக அந்த அறிக்கை மீது ஒரு குழுவை அமைத்ததைப் பார்த்தோம். இதுதொடர்பாக மோதல் வெடித்த போது, அமைச்சகத்தின் சார்பில் சில சமாதானங்கள் சொல்லப்பட்ட போதும், இவ்வாறு குழு அமைக்கப்பட்டதை நியாயமான அல்லது நேர்மையான ஒன்று எனக் கருத முடியுமா? இது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும், மக்களின் குரலை நெறிக்கும் செயலாகாதா? இவை அனைத்தும் நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரங்களைக் கீழறுத்திடுவதற்கான ஒரு திட்டத்தின் அடையாளங்களேயன்றி வேறல்ல. அரசின் இத்தகைய இழிவான நடவடிக்கைகள் இதர பல கொள்கைப் பிரச்சனைகளிலும் வெளிப்பட்டிருக்கின்றன. 1990-களுக்கு முன்பெல்லாம், நாட்டிலுள்ள சாமானியன், தொலைக்காட்சி முன் அல்லது வானொலி முன் அமர்ந்து, பட்ஜெட் முன்மொழிவுகள் குறித்து தெரிந்துகொள்வதற்காக ஆவலோடு காத்திருப்பார்கள். வரி விதிப்பு முறைகளில் ஏதேனும் மாற்றம் வருமா? பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகளில் மாற்றம் இருக்குமா? ரயில் கட்டணம் உயருமா? இதுபோன்று எண்ணற்றவை குறித்து எதிர்பார்ப்புடன் அமர்ந்திருப்பார்கள்.
       ஆனால், இப்போதெல்லாம், எவரொருவரும் பட்ஜெட் குறித்து அலட்டிக்கொள்வதில்லை. சமீபகாலங்களில், நாடாளுமன்றம் மட்டுமல்ல, அரசாங்கம் கூட, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்திடுவதில் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. அரசாங்கம் அதற்கான அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது. சென்ற ரயில்வே பட்ஜெட்டின்படி இனி ரயில் கட்டணங்கள் ஓர் ஒழுங்குமுறை அதிகாரக்குழுமத்தின் (regulatory authority) மூலமாக தீர்மானிக்கப்பட இருக்கின்றன. அரசாங்கம் தற்போது பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax) அமல்படுத்துவதற்காக ஓர் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றத் தயாராகிக் கொண்டிருக்கிறது. வரைவு சட்டமுன்வடிவின்படி, வரி விகிதங்களைத் தீர்மானித்திட, நாடாளுமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கான வரி விதிகத்தைத் தீர்மானிப்பதற்கான அதிகாரங்களை பொருள் மற்றும் சேவை வரிக் கவுன்சில் (GST Council) மட்டுமே பெற்றிருக்கும். இவ்வாறு வரிவிதிக்கும் நடைமுறைகளில் இனி நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றங்களுக்கோ எவ்வித வேலையும் கிடையாது. இதன் மூலமாக பட்ஜெட் என்பது வெறுமனே காலத்தைச் செலவழிக்கும் ஒன்றாகவே மாறுகிறது. இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு, அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய பொறுப்புகள் அவர்களிடமிருந்து, பறிக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்புகள் வந்தபின்னர், அரசாங்கம் இச்சட்டமுன் வடிவில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்திருக்கிறது. அதாவது பொருள் மற்றும் சேவை வரிக் கவுன்சில் அதிகாரங்கள் சிபாரிசு செய்யக்கூடியவை மட்டுமே என்று அரசு கூறியிருக்கிறது. ஆனால், உண்மையில், இதன் சிபாரிசுகள் எதிர்காலத்தில் நிதியமைச்சர்களின் கைகளைக் கட்டிப்போடும் என்பதிலோ, அதன்மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்திடும் என்பதிலோ ஐயமில்லை. நாடாளுமன்ற அமைப்புமுறைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு மிகப்பெரிய அச்சுறுத்தல், இந்திய சமூகத்தின் அடிப்படை அமைப்பாக விளங்கும் இதன் பிரதிநிதிகளின் வர்க்கப் பின்னணி மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும். நாடாளு மன்ற உறுப்பினர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 15-ஆவது மக்களவையில் 306 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாவார்கள். இது, 14-ஆவது மக்களவையை விட நூறு விழுக்காட்டுக்கும் அதிகமானதாகும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு 5.8 கோடி ரூபாய்களாகும். நாட்டின் மக்கள்தொகையில் 77 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் கீழே தான் செலவழிக்கிறார்கள் என்று கூறப்படுகிற ஒரு சமூகத்திற்கு இவர்கள்தான் பிரதிநிதிகள் என்று கூறப்படுவது கேலிக்கூத்தாக இல்லையா? மற்றொரு புள்ளி விவரம் என்ன கூறுகிறதெனில், சென்ற மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளவர்கள் 32 விழுக்காட்டினர் என்பதாகும். 50 லட்சம் ரூபாய்க்கும், 5 கோடி ரூபாய்க் கும் இடையே சொத்து உள்ள வேட்பாளர் களின் வெற்றி வாய்ப்பு 18.5 விழுக்காடு, பத்து லட்சத்திற்கும் கீழே சொத்துள்ளவர்களின் வெற்றி வாய்ப்பு வெறும் 2.6 விழுக் காடு மட்டுமே.
            இதன் மூலம், தாராளமயப் பொருளாதாரத்தின் தேர்தல் அமைப்பு முறையில் மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாக பணபலம் இருக்கிறது என்பது தெளிவு. ஒரு குறிப்பிட்ட காலம் வரை, இந்திய ஜனநாயக அமைப்புமுறை ஒரு முற்போக்கு குணாம்சத்தோடு இருந்தது. ஆனால், ஆளும் வர்க்கத்தினரால் அது தாக்குத லுக்கு உள்ளாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவ குணாம்சத்தைப் பாதுகாத்திட வேண்டும். நாடாளுமன்றம் மூலமாகத்தான் மக்களின் அபிலாசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்திட முடியும். இதன்மூலம்தான் நாட்டின் சட்டங்களையும், மக்களுக்கான நீதியையும் வழங்கிட முடியும். நாடாளுமன்றத்திற்கான அதிகாரங்களையும், பொறுப்புகளையும் மறுப்பதோ அல்லது அவற்றைப் பறிப்பதோ மக்களின் நியாயமான அபிலாசைகள் அரிக்கப்படுவதற்கே இட்டுச்செல்லும்.

நன்றி : தி இந்து நாளிதழ் ஆகஸ்ட்7
தமிழில் : ச.வீரமணி

கருத்துகள் இல்லை: