செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மைதா புரோட்டா - விரும்பி உண்ணப்படும் நச்சு உணவு தடை செய்யப்படவேண்டும்...!


 
         தமிழகத்தில் நகரங்களில் மட்டும் அல்லாது பட்டிதொட்டியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடைகளில் புரோட்டா கடைகளுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழகம் மற்றும் கேரளாவில் மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவு புரோட்டாவாகும். இதிலும் எத்தனை வகை உண்டு. முட்டை புரோட்டா, கொத்து புரோட்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, சில்லி புரோட்டா என்று கூறும் போதே நாக்கில் எச்சில் ஊறும். குற்றாலம் செல்லும் அனைவரும் தவறாமல் பிரானூர் பார்டரில் கிடைக்கும் புரோட்டா கடைகளுக்கு சென்று ஒருகை பார்க்காமல் திரும்புவதில்லை.
கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவில் இருந்து புரோட்டா தயாரிக்கப்படுகிறது. நமது ஊர்களில் அரிசி போல் அன்றாட உணவில் கோதுமையை பயன்படுத்தி வரும் வட இந்தியாவில் புரோட்டா விரும்பி சாப்பிடப்படுவதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய தகவலாகும். இரண்டாம் உலக போரின் போது கோதுமை பற்றாக்குறையை களைய மைதா அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அவ்வேளையில் புரோட்டா தமிழகத்தின் உணவுவகைகளில் ஒன்றாக மாறியது. மைதாவின் தூய வெண்மை நம் மனதைக் கொள்ளை கொள்ளச்செய்யும்.
          ஒரு நாகம் படம் எடுத்தால் பார்க்க அழகாக இருக்கும் . அதற்காக அதை கையில் எடுத்து விளையாட முடியுமா ? ஆனால் வெண்மையான மைதாவில் மறைந்திருக்கும் நச்சுப்பொருட்களை நாம் விரும்பி உண்கிறோம். அதன் மூலம் நச்சை நாமே நமது உடம்பில் ஏற்றிக்கொள்கிறோம். இந்த மைதாவில் இருந்து புரோட்டா மட்டுமல்ல, சிறியோரில் இருந்து பெரியோர் வரை விரும்பி உண்ணும் கேக் உள்ளிட்ட பல பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.புரோட்டா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை இங்கு விளக்க வேண்டியதில்லை. அது அனைவரும் நேரில் பார்த்த விஷயம்தான். ஆனால் மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதுதான் இங்கு கூறப்பட வேண்டிய தகவலாகும்.
            அங்குதான் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. அவைதான் உடம்பில் சேரும் நச்சுப்பொருட்களாகும் .முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள். கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது.
         இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது. இது மைதாவில் உள்ள மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு காரணியாகிறது. மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகுமிருதுவாக மாறுகிறது.
               சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக்சான் சேர்க்கப்படும் மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும்.
              இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன. இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன. கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக்காடு வைட்டமின்களும், தாது பொருட்களும் அகற்றப்படுகின்றன. அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படுகிறது. களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல.
          நார்ச்சத்து இல்லா உணவு நமது செரிமான சக்தியை அழித்து விடுகின்றன. எனவே இவற்றை குழந்தைகளுக்கு அளிப்பதை தவிர்ப்பது நல்லது. மைதாவில் சத்துக்கள் எதுவும் இல்லை. வெறும் சக்கையைத்தான் நாம் உண்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் மைதாவில் தயாராகும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் மருத்துவர்களும், இருதய நோய் மருத்துவர்களும் புரோட்டா சாப்பிடுவதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். நாம் என்ன உண்ண வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடும் விளம்பரங்களை கண்டு நாம் ஏமாந்து விடக்கூடாது. மைதா நமக்கு நன்மை பயக்காது. அதன் உற்பத்தியாளர்களுக்கு அள்ளிக்கொட்டும் காமதேனு. நமக்கு அது நச்சாகும்.
          கேரளாவில் புரோட்டாவின், மைதாவின் தீமைகள் குறித்து பிரச்சாரம் தொடங்கி விட்டனர். புரோட்டா குறித்து ஒரு ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்போல்லோ மருத்துவமனை இதயநோய் மருத்துவர் ஏ.மாதவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு நம்மையும், நமது அடுத்த தலைமுறையையும் காப்போம். பாரம்பரியமான கேப்பை, கம்பு, சோளம், வரகு, திணை ஆகியவற்றில் இருந்து தயாராகும் உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
நன்றி :


4 கருத்துகள்:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சொன்னது…

கோதுமையற்ற உணவை இங்கே (மலேசியாவில்) தேடுவது குதிரைக்கொம்புதான்.
நல்ல தகவல்...

Dr.G.Johnson சொன்னது…

இது பயன்மிக்க நல்ல தகவல்..இது பற்றி கேள்விப் பட்டதில்லை. மருத்துவர்கள் இதை ஆராய்ந்து பொது மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது..தகவலுக்கு நன்றி...டாக்டர் ஜி. ஜான்சன் .

Unknown சொன்னது…

வியர்வையும் மூக்குசளியும் சொட்ட சொட்ட புரோட்டா பிசைவதை ஒருமுறை பார்த்தால்.. ஜென்மத்திற்கும் சாப்பிட தோன்றாது.

முத்துவாப்பா சொன்னது…

பாய்ன்ட் நெம்பர் 1: கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் மைதா
பாய்ன்ட் நெம்பர் 2: கோதுமை தட்டுப்பாட்டை சமாளிக்க மைதா

கோதுமை தட்டுப்பட்டுச்சுன்னா மைதாவும் தானேங்க தட்டுப்படும். அப்ப மைதா தயாரிக்க மட்டும் கோதுமை தட்டுபாடில்லாம கிடைக்குமா..

இதெல்லாம் புதுசா அறிமுகமாயிருக்ற பீட்ஸா, பர்கர் ஸாண்ட்விச் பக்கம் மக்களை ஓட்டுறதுக்காக கார்பொரேட்காரவுங்க உட்ற பீலா..

பரோட்டாவ வச்சி இப்ப பன்ற ஆராய்ச்சியெல்லாம் இத்தன வருஷமா யாரும் பன்னலியே ஏனாம்..?

உட்டாலக்கடி ஜாங்கிரி சைதாப்பேட்ட வடகறி..அண்ணனுக்கு ஆறு பரோட்டா பார்ஸல்ல்ல்....