செவ்வாய், 5 நவம்பர், 2013

படேலுக்கு இணையாக மோடியை முன்னிறுத்துவது மோசடியானது....!

 




                    சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சியில் கரண் தாப்பர் நடத்தும் ''டெவில்ஸ் அட்வகேட்'' என்ற  நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திர மோடியை கீழ்கண்டவாறு கடுமையாக விமர்சனம் செய்தார்.                                               
          சர்தார் வல்லபாய் படேல் தற்போது உயிரோடு இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக நரேந்திர மோடி விஷம் கக்கி வருவதைப் பார்த்து மிகவும் வேதனையடைந்திருப்பார். மேலும் நரேந்திரமோடியை ஒரு போதும் தனது தத்துவார்த்த வாரிசாக சர்தார் வல்லபாய் படேல் ஏற்றுக்கொண்டிருக்கவே மாட்டார்.
               அவரது வாரிசாக தன்னைத்தானே மோடி புகழ்ந்துகொள்வதும், அவரது பா.ஜ.க ஆதரவாளர்கள் கொண்டாடுவதும் எந்தவிதத்திலும் பொருத்தமற்றதும்,  இது  படேலை முற்றிலும் அவமரியாதை செய்வதுமான செயலாகும்.
                 2002 - ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெருமளவில் மதவெறிப் படுகொலைகள் நடந்தபோது, மோடி தனது ''ராஜதர்மத்தை'' நிறைவேற்றிவிட்டார் என்று கூறி அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மோடியை புகழ்ந்தார். அப்போது அவர்கள் படேலைப் பற்றி எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. ஒருவேளை படேல் தற்போது உயிரோடு இருந்திருந்தால் மிகவும் வருத்தமடைந்திருப்பார். வேதனையும் கவலையும் அடைந்திருப்பார். 
                இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக மட்டுமல்ல. குஜராத்திலிருந்து வந்தவர் என்ற முறையிலும் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த தாக்குதலைத் தடுக்க முடியாமல் போய்விட்டதே என்று படேல் கவலைப்பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன். படேலுக்கு இணையாக மோடியை முன்வைப்பது முற்றிலும் மோசடியானது. ஏற்றுக்கொள்ளமுடியாதது. 
            சர்தார் வல்லபாய் படேல் என்பவர் மகாத்மா காந்தியின் சீடராக இருந்தவர். மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மாபெரும் குடைகளின் கீழ் வளர்ந்தவர். மோடி என்பவர் ஆர்.எஸ்.எஸ் என்ற குடையின் கீழ் வளர்ந்தவர். இப்படி வேண்டுமானால் ஒப்பிட்டுப் பேசலாம். மேலும் மற்றொரு அம்சத்தையும் இருவருக்கும் இடையில் ஒப்பிடலாம். அது என்னவென்றால் படேல் என்ற தனி மனிதர் எப்போதுமே ஒரு குழுவை இயக்குபவராக, கூட்டு உணர்வை ஏற்படுத்துபவராக இருந்தார். ஆனால்  அவரது வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தன்னை முன்னிறுத்தியதில்லை. எப்போதுமே இதர மக்களுக்காகவே பாடுபட்டவர். ஆனால் மோடியைப் பொறுத்தவரை குழு உணர்வை ஏற்படுத்துகிறார். அதிலும் அது முழுக்க முழுக்க தன்னை மட்டுமே முன்னிறுத்துவதாக அமைந்திருக்கிறது. 
            காங்கிரஸ் என்ற இயக்கம் சர்தார் வல்லபாய் படேலை மறந்து வெகுகாலமாகிவிட்டது என்றும், அவர் மறைந்து 63 ஆண்டு காலம் ஆகியுள்ள நிலையிலும், அவரது பணிகளை சிறு அளவிற்கு கூட நினைவுகூறத் தயாராக இல்லாத கட்சியாக மாறிவிட்டது. நேருவைத் தொடர்ந்து இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, தற்போது ராகுல்காந்தி என அவரது குடும்ப வாரிசுகள் மட்டுமே அரசு அதிகாரத்தின் மூலமாக பலன் பெற்றுவருகிறார்கள். ஆனால் படேலின் குடும்பத்திலிருந்து அப்படி யாரையும் சொல்ல முடியாது. 
            நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேருவை மகாத்மா காந்தி முன்வைத்தபோது, நேருவை விட 16 ஆண்டுகள் மூத்தவராக இருந்த போதிலும், வல்லபாய் படேல் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார். ஏனென்றால் காங்கிரஸ்காரராக இருப்பதையும் காந்தியின் சீடராக இருப்பதையும்  மட்டுமே அவர் பெருமிதமாக நினைத்திருந்தார். நேருவே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்றும் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டவர் அவரே என்றும் ஏற்றுக்கொண்டவர் தான் படேல் என்பதுமறக்கமுடியாதது.
            மேற்கண்டவாறு பேசிய மகாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், இந்திய விடுதலைக்காக போராடியவருமான சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
நன்றி : 

கருத்துகள் இல்லை: