ஞாயிறு, 29 டிசம்பர், 2013

சிலியின் சிலிர்ப்பு...!

              
           சிலி என்ற சின்னஞ்சிறு லத்தீன் அமெரிக்க நாட்டில் கிடைக்கும் இயற்கையான தாதுவளம் செம்பு மட்டும்தான். அதுவும் உலகில் அதிக அளவில். ஆனால் இப்போது சிலி என்ற நாட்டுக்கு ஒரு வர்ணப் பொலிமை கைவந்திருக்கிறது. கபடமற்ற குழந்தையைப் போல் புன்னகைக்கும் ஓர் அறுபத்து இரண்டு வயது பெண்மணியின் முகம் தான் இன்று உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது. ஆம்....  மிச்சேல் பேச்லெட். எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் நனவாக்க சிலியின் மக்கள் மிக பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையும் தேர்ந்தெடுத்த ஜனாதிபதி. சால்வடார் அலண்டேயை ராணுவப் புரட்சிமூலம் அகற்றிய பினோசெட்டின் ராணுவ ஆட்சிக்குப் பிறகு இரண்டு தடவை சிலியின் ஜனாதிபதியாகும் ஒரே தலைவி இவர் தான். ராணுவ ஆட்சியின் கொடுமையை அனுபவித்த மிச்சேல் நெடிய போராட்டத்திற்குப் பின் 2006-ல் சிலியின் ஜனாதிபதியானார்.
             தொடர்ந்து இரண்டு தடவை பதவி வகிக்க அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதிக்காததால் 2010ல் அவர் ஆட்சியிலிருந்து விலகினார். இதோ இப்போது அவர் மிக பலம் வாய்ந்த மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளார். சோசலிஸ்ட் கட்சியின் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளும் சேர்ந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கிய மிச்சேல் 62 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். தன் எதிர் அணி தலைவியும் தன் பால்யகால தோழியுமான ஏவ்லின் ரோஸ் மேத்திக்கு 38 சதவீதம் வாக்குகளே கிடைத்திருக்கிறது. 1950களில் ராணுவ முகாமில் சேர்ந்து பழகி விளையாடிய தோழிகளாவார்கள் இருவரும். இருவருடைய தந்தையர்களும் ராணுவ அதிகாரிகளாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1951 செப்டம்பர் 29 தான் மிச்சேல் பேச்லெட்டின் பிறந்த நாள். தலைநகரான சாண்டியாகோவில் தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஏஞ்சல் ஜெரிய கோமசிற்கும் ராணுவத்தில் பிரிகேடியர் ஜெனரலான ஆல்பர்டோ பேச்லெட்டுக்கும் மகளாக பிறந்தர். அப்பாவின் வேலை நிமித்தமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றல் சகஜமாக இருந்ததால் பள்ளிப்படிப்பு பல இடங்களில் முடிக்க வேண்டியதாயிற்று.
              படிப்பில் மிக திறமைசாலியான மிச்சேல் கைப்பந்து விளையாட்டிலும் பள்ளிப்பாடகர் குழுவிலும் முன்னணிப் பாத்திரம் வகித்தார். 1970-ல் சிலி பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வில் முதல் மாணவியாக வந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். சமூக அறிவியலிலும் பொருளாதாரத்திலும் விருப்பம் கொண்டிருந்த மிச்சேலை அப்பாதான் மருத்துவத்துறைக்குத் திருப்பினார். துன்பத்தால் அவதிப்படும் மக்களுக்கு ஆறுதலளிக்கவும் நாட்டுக்குச் சேவை செய்யவும் உகந்தவழி இதுதான் என்று அவர் பின்பு புரிந்துகொண்டார். 1973 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் உதவியுடன் சால்வடார் அலண்டேயின் ஜனநாயக அரசைக் கவிழ்த்து ஜெனரல் அகஸ்டோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றினார். இதற்கு எதிராக குரலெழுப்பிய ஜெனரல் ஆல்பர்டோவை தேசத்துரோகக் குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தார். மிச்சேலின் எதிராளியான ரோஸ் மேத்தியின் அப்பா ஜெனரல் பெர்னாண்டோ மேத்தி அப்போது ஆல்பர்டோவை அடைத்திருந்த சிறையின் பொறுப்பாளராக இருந்தார். சாண்டியாகோ சிறையில் பல மாதங்களாக அனுபவித்த சித்ரவதையால் 1974 மார்ச் 12 அன்று ஆல்பர்டோ மாரடைப்பால் காலமானார். இந்தச் சோதனைக் காலத்தில் மிச்சேலும் தாயும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள். கண்களைக் கட்டி அவர்களை சாண்டியாகோவிலுள்ள ரகசியச் சிறைக்கு கொண்டு சென்று தாயையும் மகளையும் தனித்தனியாக சிறையில் அடைத்துச் சித்ரவதை செய்தது பினோசெட்  அரசு.
             காலப்போக்கில் மனிதாபிமானமுள்ள சில ராணுவ அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களை விடுதலை செய்தனர். பின்பு ஆஸ்திரேலியாவிலுள்ள தனது மூத்த சகோதரனுடன் மிச்சேலும் தாயும் சிறிது காலம் தங்கிவிட்டு 1975 மே மாதம் கிழக்கு ஜெர்மனியில் தன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து கொண்டு அங்கு ஒரு சமுதாய மருத்துவக் கூடத்தில் வேலை செய்தார்.நான்காண்டு கால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு 1979-ல் மிச்சேல் சிலிக்கு திரும்பினார். 1983-ல் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பு முடித்து பொது சுகாதார மையத்தில் சேவை செய்தார். 1990-ல் சிலியில் மீண்டும் ஜனநாயகம் திரும்பியதால் இயக்க வேலைகளில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். 1994 முதல் 1997 வரை சுகாதார துணை அமைச்சரின் மூத்த உதவியாளராக பணிசெய்த அவர் மேலும் ராணுவ விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு முடித்து 1998 முதல் ராணுவ அமைச்சரகத்திலும் சேவை செய்தார். 2000 - 2004 கால அளவில் சுகாதார அமைச்சராகவும் ராணுவ அமைச்சராகவும் செயல்பட்டார். 2010 மார்ச் மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்பு மிச்சேல் சமுதாய சேவையில் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டார்.
         ஐ.நா. பாலினச் சமத்துவம் மற்றும் மகளிருக்கு கூடுதல் அதிகாரம் அளிப்புக் குழுவின் முதல் நிர்வாக இயக்குநர் ஆக கடந்த மார்ச் வரை பணியாற்றினார். பல மொழிகளை கையாள்வதில் திறமையுள்ள மிச்சேல் தாய்மொழியான ஸ்பானிஷைத்தவிர ஆங்கிலம், ஜெர்மன், போர்ச்சுகீஸ், பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். ''அனைத்து மக்களின் சிலி'' என்ற கனவுதான் என்னை இங்கே கொண்டு வந்துள்ளது. கனவுகளை நனவாக்குவது எளிதானவை அல்ல என்றாலும், உலகை மாற்றுவது எப்போது தான் எளிதாக இருந்தது?  என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு மிச்சேல் பேச்லெட் தோழர்களை கேட்டார்.
 
‘தேசாபிமானி’ வாராந்திர சிறப்பிதழிலிருந்து தமிழில் : ஏ.குமார், திருச்சி

நன்றி : 

    

கருத்துகள் இல்லை: