செவ்வாய், 7 ஜனவரி, 2014

மிஸ்டர் மன்மோகன்... தலைவலிக்கு மாற்று திருகுவலி அல்ல...!

  கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்     
                                 தமிழ் மாநிலச்செயலாளர்,                  
                                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                        
               பிரதமர் மன்மோகன் சிங் பொதுவாக பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை. கடந்த பத்தாண்டுகால ஆட்சிக்காலத்தில் மூன்றுமுறை மட்டுமே பத்திரிகையாளர்களை அழைத்து பேசியுள்ளார்.                 அவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் பிரதமராக மாட்டேன் என்று கூறியுள்ளதோடு அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டதையே தமது பதவிக்காலத்தின் முக்கியமான தருணமாகவும், சாதனையாகவும் கருதுகிறேன் என்று திருவாய் மலர்ந்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 அரசுக்கு இடதுசாரிக்கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து வந்தன. குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கு மாறாக அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டில் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட முயன்றதால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக்கட்சிகள் வாபஸ்பெற்றன.
               நாட்டின் இறையாண்மைக்கும், சுயாதிபத்தியத்திற்கும் பேராபத்தை இந்த உடன்பாடு விளைவிக்கும் என்பதாலேயே இடதுசாரிக் கட்சிகள் இந்த முடிவை எடுத்தன. இது மிகவும் சரியான ஒன்று என்பதை காலம் நிரூபித்துள்ளது.அமெரிக்க நிறுவனங்கள் நிறுவும் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் குறைந்தபட்ச இழப்பீடு வழங்குவதற்கான ஷரத்துகளைக் கூட உடன்பாட்டிலிருந்து நீக்க வேண்டுமென அமெரிக்க அரசு நிர்ப்பந்தம் செய்கிறது.
                      மன்மோகன் சிங் அரசும் இதற்கு வளைந்து கொடுத்தே வந்துள்ளது. இந்த உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் நாட்டில் சமூக, பொருளாதார தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சி அதிகரித்தது என்று மன்மோகன்சிங் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இந்தியாவின் சுயசார்புக்கு பல்வேறு வழிகளில் ஆபத்து ஏற்பட்டது இந்த உடன்பாடு எட்டப்பட்டபிறகு தான். குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் கூட அந்நியரை அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
               அதுமட்டுமின்றி காப்பீட்டுத்துறை, வங்கி போன்ற கேந்திரமான துறைகளிலும் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கமுதலாளிகள் வெளிப்படையாகவே மிரட்டுகின்றனர். நாட்டின் சமூகப் பொருளாதார தொழில்நுட்பத்துறைக்கு அமெரிக்கா எந்தவகையில் உதவியுள்ளது என்று விளக்கவில்லை பிரதமர். விளக்குவதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் இதற்கு காரணம்
       இடதுசாரிக்கட்சிகள் ஆதரவுடன் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டன. இன்றைக்கு இவற்றைத்தான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு தன்னுடைய சாதனையாக கூறிக்கொள்கிறது.
             சுதந்திர இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர் மட்ட ஊழல்கள் மலிந்த ஆட்சியாக ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது. தமது அரசின் மீது ஊழல் புகார் கூறப்படுவதாகவும் 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த போதும் 2009 தேர்தலில் மீண்டும் மக்கள் வாக்களித்து ஐமுகூ ஆட்சி அமைந்தது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அலைக்கற்றை வரிசை ஊழலுக்கான அடித்தளம் முந்தைய பாஜக ஆட்சிக் காலத்திலேயே போடப்பட்டுவிட் டது.
             எனினும், 2009ம் ஆண்டிற்கு பிறகு தான் ஐமுகூ அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து ஊர்வலம் போல அணிவகுத்தன என்பதை மறந்து விடமுடியாது. குறிப்பாக, மத்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை தலைமை அதிகாரி பல்வேறு முறைகேடுகளை வெளிக்கொணர்ந்தார்.
                 நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் பெருமளவு ஊழல் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதில், பிரதமர் அலுவலகமே நேரடியாக குற்றம் சாட்டப்பட்டது. ஐ.மு.கூ. - 2 ஆட்சி காலத்தில்தான் இயற்கை வளங்கள் பெருமளவு சூறையாடப்பட்டன என்பது நிதர்சனமான உண்மை. இந்த கொள்ளையை தொடரவேண்டும் என்பதற்காகவே பன்னாட்டு மற்றும் உள் நாட்டு முதலாளிகள் தாராளமயமாக்கல் கொள்கையைப் பின்பற்றும் மோடி பிரத மராக வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
           நரசிம்மராவ் பிரதமராகவும், இப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் நிதியமைச்சராகவும் இருந்த காலத்தில்தான் தாராளமயமாக்கல் கொள்கை எனும் நாசகர பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து வந்த ஆட்சிகள் இதே பாதையைத்தான் பின்பற்றின. இன்றைக்கு நாடு அனுபவித்துக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்ற பிரச்சனைகளுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குவது இந்தக் கொள்கை கள்தான்.
              ஆனால், பிரதமர் தனது பேட்டியில் இந்த கொள்கைகள் தொடரும் என்று கூறியுள்ளார். இதிலிருந்தே ஆட்சியாளர்கள் கடந்த கால அனுபவத்திலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ராகுல்காந்தி என்றும் மன்மோகன்சிங் முன்மொழிந்துள்ளார். அவர் பேட்டியளித்ததன் நோக்கமே இதை கூறத்தான்.
                           இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாறாக, பிரதமர் வேட்பாளர் மோடி என்று பாஜக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியும் புறப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. மறுபுறத்தில், பிரதமர் வேட்பாளர் என்று பாஜகவால் பரிவட்டம் கட்டப்பட்டுள்ள நரேந்திரமோடி, மன்மோகன்சிங் பேட்டி குறித்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்.
                     இதற்கு காரணம் பாஜகவும் ஆதரிக்கும் தாராளமயமாக்கல் கொள்கைத்தான். இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென இடதுசாரிக்கட்சி கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை பற்றி வாய்திறக்க மோடி மறுக்கிறார். ஏனென்றால் பல்வேறு சந்தர்ப்பங்களில் விவசாயிகளுக்கு எதிரான கொள்கையை செயல்படுத்த காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு துணை நின்ற கட்சிதான் அது. பாஜக ஆட்சி க்கு வந்தாலும் இதே கொள்கைகளைத் தான் அவர்கள் தொடர்வார்கள்.
                அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட் டை நிறைவேற்ற கைதூக்கி ஆதரவு தெரிவித்த கட்சிதான் அது. இதை மறைக்கத்தான் கடந்த கால வரலாற்றுப் பெருமை என்று தங்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன் நிறுத்துகிறார் மோடி. ஒளரங்கசீப் ஆட்சிக்காலம் குறித்தெல்லாம் அவர் பேசுவது இதற்காகத்தான். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு விஷேச அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறுவதன் மூலம் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை தீவிரப்படுத்தவே அந்தக் கட்சி முயல்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.காங்கிரசும், பாஜகவும் ஒன்றுக்கொன்று மாற்று அல்ல.
                தாராளமயமாக்கல் கொள்கையை தடம் மாறாமல் பின்பற்றுவதில் அவர்களுக்குள் அபூர்வ ஒற்றுமை உள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் பேரழிவு என்று மன்மோகன்சிங் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியால் பேரழிவு என்று மோடி கூறுகிறார். ஆனால், இந்த இரு கட்சிகளுமே நாட்டிற்கு பேரழிவை தரும் பாதையைத்தான் முன்நிறுத்துகின்றன. இந்த இரு பேரழிவு சக்திகளும் ஒருசேர முறியடிக்கப்பட வேண்டும். தலைவலிக்கு மாற்றாக திருகுவலியை ஏற்க முடியாது. காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏற்க முடியாது.
          இரு வலிகளுக்கும் நிவாரணம் தேடும் வகையில், மாற்று வழியை, மாற்றுக் கொள்கையை முன்நிறுத்துவதே தேசத்திற்கு இப்போதைய தேவையாகும். இந்த அடிப்படையில்தான் மதச்சார்பற்ற மாநிலக்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பெரும்பணியில் இடதுசாரிக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
நன்றி:
 

கருத்துகள் இல்லை: