சனி, 26 ஜூலை, 2014

மணல் கொள்ளையர்களை கண்டித்தால் ஜெயலலிதாவிற்கு ஏன் கோபம் வருகிறது....?

                    சென்ற வாரம் வேலூர் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற தலைமைக்காவலர் கனகராஜ் என்பவர்  மணல் கொள்ளையர்களால் டிராக்டர் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில்     இதுபோன்ற சம்பவம் இது முதல் தடவையல்ல. பல முறை நடந்திருக்கிறது. மணல் கொள்ளையை தடுக்கச்சென்ற உதவி கலெக்டர், தாசில்தார், துணை தாசில்தார், போலீஸ் காவலர் என பல அரசு உயர் அதிகாரிகளை மணல் கொள்ளையர்கள் மணல் லாரி அல்லது டிராக்டர் போன்றவைகளை ஏற்றி படுகொலை செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற படுகொலையை கண்டித்தும், ஆட்சியாளர்களுக்கும் மணல் மாபியாக்களுக்கும் உள்ள தொடர்பை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அறிக்கையை படித்த அம்மையாருக்கு கோபம் வந்துவிட அரசு வழக்கறிஞரை விட்டு தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
            தோழர் வெளியிட்ட அறிக்கையில் உள்ள கருத்துகள் உள்நோக்கம் கொண்டவையாகவும், அதில் சொல்லப்பட்ட  ஒரு கருத்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் எந்த இடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரைப் பற்றி தனிப்பட்ட முறையில் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறாக சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் ஜெயலலிதா அம்மையார் பெங்களூரு நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போதும், குற்றவாளி கூண்டில் நின்றுகொண்டு நீதிபதியின் கேள்விகளுக்கு கைகட்டி பதில் சொல்லும் போதும், நீதிமன்ற விசாரனைகளிலிருந்து தப்பிப்பதற்கு அடிக்கடி ''வாய்தா'' வாங்கும் போதும் தன்னுடைய ''நற்பெயருக்கும், புகழுக்கும்'' ஏற்படாத களங்கம் இந்த அறிக்கையின் மூலமா ஏற்பட்டுவிடப்போகிறது என்பது தான் புரியவில்லை.
            ஆனால் உண்மை என்ன...? மணல் கொள்ளையை நிரந்திரமாக தடுக்கவேண்டிய ஆட்சியாளர்கள் திராவிடக்கட்சிகள் இருவருமே கொலைசெய்யப்பட்ட அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ''நிவாரண நிதியை'' மட்டும் அளித்துவிட்டு தன்னுடைய இயலாமையை அல்லது மணல் கொள்ளையர்களுடனான தன்னுடைய ''உறவை'' மூடி மறைத்துவிடுகின்றனர்.
              இந்த மணல் கொள்ளைகளில்  நேர்மையான அதிகாரிகளின் உயிரிழப்பு மட்டும் சம்பந்தப்படவில்லை. அரசாங்கத்திற்கு வரவேண்டிய வருமான இழப்பும் அடங்கியிருக்கிறது. மணல் மாபியாக்களுக்கு கோடிக்கோடியாய் அள்ளித்தரும் இந்தத் ''தொழிலுக்கு'' பின்னால் ஆட்சியாளர்களின் ஆதரவும், அடிக்கிற கொள்ளையில் ஆட்சியாளர்களுக்கு பங்கும் இருக்கிறது உண்மை இந்த அறிக்கையின் மூலம் அம்பலப்படவே தான் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் மீது இவ்வளவு கோபம் வந்திருக்கிறது.
             இது என்ன பெரிய வழக்கு. எங்கள் தலைவர்களுக்கு இது சுண்டைக்காய் போன்றது. இந்த தேசத்திற்காகவும், மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் சுதந்திரப்போராட்டக் காலத்திலிருந்தே ஏராளமான அடக்குமுறைகளையும், வழக்குகளையும் சந்தித்தவர்கள். இதற்கெல்லாம் பயந்துவிடவும் மாட்டார்கள். ''வாய்தா'' வாங்கவும் மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை: