ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஜெயலலிதா கைதானதை கண்டித்து பள்ளிகளை மூடப்படுவது முட்டாள்தனமானது...!

                    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகிறது. அவர் சிறைக்கு சென்ற நாளிலிருந்து  அவரது கட்சிக்காரர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாக இன்றுவரையில் நூதனமான முறைகளில் செய்துவருவதும் தீக்குளிப்பதுமான முட்டாள்தனமான கண்மூடித்தனமான நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்துவரும் சூழ்நிலையில்,  இன்னொரு பக்கம் பல்வேறு துறைகளில் அவரால் பலனடைந்தவர்கள் தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் தினமும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றார்கள். அப்படி செய்யவில்லை என்றால் ஆளுங்கட்சியின் அதிருப்திக்கு ஆளாகிவிடுவோமா, கட்டுப்பாடுகளுக்கும் கெடுபிடிகளுக்கும் உள்ளாக்கப்படுவோமோ என்ற பயத்தில் அவர்கள் ஒரு நெருக்கடியின் பேரில் செய்கிறார்கள். சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்ததும், சினிமா தியேட்டர்களை ஒரு நாள் மூடியதும், தனியார் பஸ்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ததும், ஆம்னி பஸ்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யறதும் போன்ற போராட்டங்கள் என்பது ஜெயலலிதாவினால் ஏற்கனவே ஏராளமான பலன்களை அனுபவித்தவர்கள், எதிர்காலத்தில் பெறப்போகும் பலன்களுக்காக ஒரு எதிர்ப்பார்ப்போடு தான் செய்கிறார்களே தவிர இவர்கள் உள்ளப்பூர்வமாக செய்யவில்லை என்பது தான் உண்மை. தாங்கள் ஜெயலலிதாவிடம் நல்லப்பேரை வாங்கவேண்டும் என்பதற்காகவும், தங்களது பதவியை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் அமைச்சர்களும் இதுபோன்ற வேலைநிறுத்தத்திற்கு தூண்டுகோலாக இருப்பதாகவும் சொல்லபடுகிறது. அந்த வரிசையில்  இப்போது தனியார் பள்ளி உரிமையாளர்களும் சேர்ந்துகொண்டுள்ளனர். 
                   ஜெயலலிதாவின் கைதானத்தை  கண்டித்து தனியார் பள்ளி உரிமையாளர்கள் தமிழகம் முழுதும் வருகிற  அக்டோபர் 7 - ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும், அன்று ஒரு நாள் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என்றும் அறிவிப்பு வெளியிட்டிருப்பது  என்பது மிக கொடுமையானது. வருந்தத்தக்கது. ஜெயலலிதா ஊழல் செய்தவர் என்று நிரூபிக்கப்பட்டு, நான்கு ஆண்டு கால சிறை தண்டனையையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டவர். நாட்டுக்காக - மக்களுக்காக போராட்டங்களை நடத்தி சிறைக்கு  சென்றவரில்லை. அப்படியிருக்க தவறிழைத்த  தனிப்பட்ட ஒருவருக்காக  பள்ளிகளை மூடி வேலைநிறுத்தம் செய்வது என்பது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதை தனியார் பள்ளி உரிமையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த செயல் தனியார் பள்ளி உரிமையாளர்களின் பொறுப்பற்றத் தன்மையை தான் காட்டுகிறது. அவர்கள் ஜெயலலிதாவிடம் தங்களது விசுவாசத்தைக் காட்டுவதற்கு வேறு வழியில்லையா...?
                இது போன்ற வேலைநிறுத்தம் மாணவ - மாணவியருக்கு தவறான பாடத்தை தான் கற்றுக்கொடுக்கும். அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடமே அவர்களுக்கு தவறான பாதையைத்தான் காட்டுகிறது என்று பொருள். நம்முடைய வாழ்நாளில் தவறுகள் செய்யக்கூடாது. அப்படி செய்தால் வருத்தம் தெரிவித்து தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும். அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளவேண்டும். என்றெல்லாம் சொல்லித்தரவேண்டிய பள்ளிக்கூடங்கள் தவறு செய்தவருக்கு ஆதரவளித்து துணைப்போவது என்பது தவறான வழிமுறையாகும். எனவே தனியார் பள்ளி உரிமையாளர்கள் ஜெயலலிதாவை  சிறையில் அடைத்ததை கண்டித்து ஒரு நாள் பள்ளிகளை இழுத்து மூடுவதை தயவுசெய்து கைவிடுங்கள். மாணவர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுங்கள். நேர்மையான அரசியலை - தூய்மையான அரசியலை கற்றுக்கொடுங்கள். இன்றைய மாணவ - மாணவியர்கள் தான் நாளைய தேசத்தின் தலைவர்கள் என்பதை மனதில் நிறுத்தி சொல்லிக்கொடுங்கள். ஊழல் செய்து கைதானவருக்காக பள்ளிகளை மூடுவதன் மூலம் தவறான அரசியலை சொல்லிக்கொடுக்காதீர்கள். 

1 கருத்து:

venkadasamy venkatraman சொன்னது…

தோழர்
இன்றைய கல்வி கூடங்கள் மாணவர்களுக்கு தேவையான எதையும் கற்று கொடுக்க போவதில்லை...
மாணவர்களிடம் தன்னம்பிக்கை, சுய சிந்தனை, பொறுமை, நிதானம், கண்ணியம்.....போன்ற எதுவுமே கற்று கொடுக்காமல் நூறு சதவீத தேர்ச்சி மட்டுமே குறிக்கோளை கொண்டு இயந்திரம் போல் செயல்படுகிறார்கள்....கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய இயலாத முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இருக்கிறாக்கள்... வாழ்க்கையை கற்று கொடுக்க முடியாது... வழ கற்று கொடுக்கலாம்...