திங்கள், 10 நவம்பர், 2014

ஆன்-லைனில் மத்திய இரயில்வே மந்திரியானவர்...!

                   இதுவரையில் ஆன்-லைனில் இரயில்வே டிக்கெட்டை தான் ரிசெர்வ் செய்து வருகிறோம். நேற்று 9-ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் எதிர்க்கட்சியான சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி சுரேஷ் பிரபு என்பவர் ஆன்-லைனிலேயே  மத்திய இரயில்வே மந்திரிப் பதவியை  ரிசெர்வ் செய்து பின் டெல்லிக்கு வந்து  பதவியையும் ஏற்றுக்கொண்டு உலக சாதனை படைத்திருக்கிறார். மயிலில் பறந்துவந்த முருகனுக்கு கிடைக்காமல், விநாயகர்  குறுக்குவழியில் சிவனிடமிருந்த மாம்பழத்தை பெற்றதாக புராணக்கதைகள் சொல்வதைப்போல, மத்திய அமைச்சர் பதவிஏற்புக்காக சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் மும்பையிலிருந்து புறப்பட்டு விமானத்தில் டெல்லி நோக்கி பறந்துவந்து கொண்டிருக்கும் போதே, அதே சிவசேனாக் கட்சியிலிருந்து கட்சி மாறி, அவசர அவசரமாக ஆன்-லைனிலேயே  பாரதீய ஜனதாக்கட்சியின் உறுப்பினர் ஆன சிவசேனாவின் இன்னொரு எம்.பியான சுரேஷ் பிரபு என்பவருக்கு  கட்சி மாறி வந்ததை பாராட்டி மோடி தனது  அன்புப்பரிசாக  மத்திய அமைச்சர் பொறுப்பை அளித்து பெருமைபடுத்தியிருக்கிறார். அதுவும் அவருக்கு சாதாரண இலாக்கா கொடுக்கப்படவில்லை. கட்சி மாறி வந்த அவருக்கு இரயிலை பரிசாக கொடுத்திருக்கிறார் என்பது அதைவிட பெருமைப்படவேண்டிய விஷயம். இவர் இரயில் ஏறியதை கேள்விப்பட்ட பதவியேற்புக்காக மும்பையிலிருந்து வந்த சிவசேனா எம்.பி மீண்டும் விமானம் ஏறி மும்பைக்கே திரும்பிவிட்டார்.
                இப்படியும் கேலி கூத்துகளை நடத்திக்காட்டுகிறார் நரேந்திரமோடி. உங்களுக்கும் மந்திரிப்பதவி வேண்டுமா...? உடனே ஆன்-லைனில் பா.ஜ.க. உறுப்பினர் ஆகுங்கள். உடனேயாக  மோடி உங்களை அழைத்து மந்திரிப்பதவி கொடுப்பார்.

கருத்துகள் இல்லை: