வியாழன், 21 மே, 2015

எதிர்பாராத பணிமாற்றமும் இடமாற்றமும்...!


            உங்களுக்கு எதிர்பாராத பணிமாற்றமும், இடமாற்றமும் உண்டாகும் என்று சோதிடத்தில் சொல்வது போல நான் சற்றும் எதிர்பாராத பணிமாற்றமும், இடமாற்றமும் என் விருப்பத்தைக் கேட்காமலேயே இன்று மிகுந்த அவசரத்துடன் என்னை நாடி வந்தது. மாறும் என்பதை தவிர அனைத்தும் மாறக்கூடியது தான் என்ற விதி எனக்கும் பொருத்தமானது தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. கடந்த 2003 -ஆம் ஆண்டில் நான் எல்.ஐ.சி திண்டிவனம் கிளையிலிருந்து மாற்றலாகி புதுச்சேரி முகவர் பயிற்சி மையத்திற்கு, மையத்தின் அலுவலகப் பணிகளுக்கும், கூடுதலாக பயிற்சி ஆசிரியர் பணிக்காகவும் புதுச்சேரி முகவர்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்ததிலிருந்து 12 ஆண்டுகள் இன்சூரன்ஸ் கல்விப்பணி நேற்றோடு முடிவுற்றது. எதிர்பாராமல் திடீரென்று நிர்வாகம் பயிற்சி மையத்திலிருந்து சாரம் கிளை அலுவலகத்திற்கு என் விருப்பமில்லாமல் மாற்றம் செய்துவிட்டது. வகுப்பை முடித்துவிட்டு மாலையில் தான் அதே கட்டிடத்தில் இருக்கும் கிளை அலுவலகத்தில் கனத்த மனத்துடன் சேர்ந்தேன்.
               எனது 28 ஆண்டுகால எல்.ஐ.சி பணியில் 12 ஆண்டுகால முகவர் பயிற்சி பணியென்பது மகத்தானது... நிறைவானது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் 15 நாட்கள், 8 நாட்கள் மற்றும் 4 நாட்கள் என மொத்தம் 378 பயிற்சி வகுப்புகளில்  சுமார் 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடையின்றி இன்சூரன்ஸ் பாடம் நடத்தியிருக்கிறேன். என் வகுப்பு என்பது வெறும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வகுப்பாக மட்டுமில்லாமல், பள்ளிப் பாடங்களையும், கல்லூரிப் பாடங்களையும் மட்டுமே படித்துவிட்டு வருகின்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள், வேறு வேலையில் இருப்பவர்கள், வேலையிலிருந்து  ஓய்வுபெற்றவர்கள் என அனைவருக்கும் அவர்கள் விரும்பி ஏற்கும்படியான தேசபக்தி, சமூக அக்கறை, மனிதநேயம், விழிப்புணர்வு, எல்.ஐ.சி பாதுகாப்பு, நேர்மை, தனிமனித ஒழுக்கம்   இவைகளோடு அறிவியல், வரலாறு, பொருளாதாரம், அன்றாட நிகழ்வுகள் ஆகிய பாடங்களையும்  இன்சூரன்ஸ் பாடத்தோடு கலந்து நடத்தும் வகுப்பாகத்தான் இருக்கும். என்னுடைய பாடம் நடத்தும் இந்த பாணி வகுப்பிலுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கும். ஆனால் இந்த பாடம் என்பது  வெளியிலிருக்கும் பல பேருக்கு வயிற்றெரிச்சலையும் தந்திருக்கிறது. வெறும் இன்சூரன்ஸ் மட்டும் நடத்தவேண்டியது தானே ஏன் தேவையில்லாமல் இதையெல்லாம் நடத்துகிறார் என்று எனக்கு பின்னால் எதிர்த்தவர்கள் பலர் உண்டு. அதேப்போல் பல இடங்களில் உள்ளதை  போல் நான் அவர்களுக்கு தகுந்தாற்போல் நேர்மை தவறி   வளைந்து கொடுப்பதில்லை. இதெல்லாம் அவர்களுக்கு எரிச்சலை ஊட்டியது.  வகுப்பிற்கு வருகின்ற முகவர்களுக்கு பலவிதமான செய்திகளை கொடுத்து விழிப்புணர்வை உண்டாக்கினேன். இதுவும் பலபேருக்கு எரிச்சலை உண்டாக்கியது. ஊழியர் - முகவர் என்ற வித்தியாசம் பாராட்டாமல் அனைத்து முகவர்களோடு பழகுவேன். அதனால்  அனைத்து முகவர்களும் தோழமையோடு என்னோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கிறார்கள். அவர்களின் உரிமைக்கான போராட்டத்தில் அவர்களோடு வீதியில் நின்று போராடுவேன். இதுவும் பலபேருக்கு எரிச்சலையும், கோபத்தையும் உண்டாக்கியது. அதனால் அவர்கள் தங்கள் உரிமைகளுக்கு போராடினார்களோ இல்லையோ, என்னை அங்கிருந்து தூக்குவதற்கு கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக போராடி தோற்றுத்தான் போனார்கள் என்பது தான் உண்மை.
              ஆனால் அண்மையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இன்சூரன்ஸ் திருத்த மசோதாவின் மூலம் முகவர் பயிற்சி வகுப்பிற்கான தேவையும், அவசியமும் குறைக்கப்பட்டுவிட்டதால், பயிற்சி மையத்தில் என்னுடைய பணியும் குறைந்து போய்விட்டபடியால் எனக்கு இந்த கட்டாயப்பணி மாற்றம் என்பது பலபேருக்கு சாதகமாகிவிட்டது. புதிய சட்டம் வென்றுவிட்டது. என்றாலும் இடமாற்றமும், பணிமாற்றமும் எனக்கு எந்தவித மனமாற்றத்தையும் உண்டு பண்ணாது. எல்.ஐ.சி பணியோடு தொடர்ந்து முகவர் சேவையும், மக்களை பணியும் ஆற்றுவேன் என்ற நெஞ்சுறுதி  எனக்கு இருக்கிறது. இனி மக்கள் சேவை என்பதும், உழைப்பாளி மக்களுக்கான போராட்டம் என்பதும்  அலுவலகப்பணியாக  என்  இருக்கையிலிருந்து தொடங்கும். 

கருத்துகள் இல்லை: