புதன், 1 ஜூலை, 2015

இடதுசாரிக்கட்சிகளின் வளர்ச்சியை காட்டுகிறது...!

                 சென்ற சனிக்கிழமையன்று சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சியினரால் திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் தனது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக போட்டியிட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது அனைத்து மந்திரிகளையும், எம்.எல்.ஏ-க்களையும் இறக்கிவிட்டு பல்வேறு ''சித்து விளையாட்டுகளை எல்லாம்'' செய்து சுமார் 1.5 இலட்சம் வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றிருக்கிறார்.
            ஆனால்  தமிழகத்திலுள்ள அனைத்து பெரிய கட்சிகளும் அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயங்கியநிலையில்  தேர்தலில் போட்டியிடாமல், தேர்தல் களத்திலிருந்து முற்றிலும் விலகியிருந்த போதிலும், தேர்தலில் போட்டியிடுவதென்பது ஜனநாயகக்கடமை என்றும், போட்டியிலிருந்து விலகி நிற்பது என்பது ஜனநாயகக் கடமையிலிருந்து விலகி நிற்பது போல் ஆகும். எனவே இடதுசாரிக்கட்சிகள் போட்டியிடும் என்று சொல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகட்சிகள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக களத்தில் இறங்கியது.
          சுயேட்சைகள் பலபேர் நின்றாலும், நேரடிப்போட்டி என்பது இடதுசாரி வேட்பாளர் சி.மகேந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் இடையே மட்டும் தான். இடதுசாரி வேட்பாளரை பொருத்தவரை தோழர்கள் பலம் மட்டும் தான். அவர்களின் மக்களுக்கான மற்றும் தேசத்திற்கான போராட்டங்கள், தியாகங்கள், நீதி, நேர்மை, மதசார்பின்மை, எளிமை, வாக்காளர்களிடம்  நேரடி சந்திப்பு, ஊழல் எதிர்ப்பு, கொள்கை, முழக்கங்கள் இவைகளெல்லாம் இடதுசாரிகளின் கூடுதல் பலம். ஆனால் ஜெயலலிதாவை பொருத்தவரை ஊழலில் சேர்த்த பணக்குவியல், பணவிநியோகம், அதிகாரம், பதவி, கள்ள ஓட்டு, ஓட்டுக்கு விலை, மதுபாட்டில், பிரியாணி இவைகள் தான் ஜெயலலிதாவிற்கு தேர்தல் வேலைகளை செய்தன. இவைகளை முடுக்கிவிட்டு செய்து முடிப்பதற்கு, அனைத்து அமைச்சர்களும், அதிமுக மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என இவர்களெல்லாம் தேர்தல் களத்தில் இறங்கி அயராது இயங்கிக்கொண்டிருந்தர்கள்.
           அதன் விளைவாகத்தான் ஒரு வாக்குச்சாவடியில் ''ஓவராக'' வேலை செய்து, மொத்த வாக்காளர்களை விட அதிகமாக வாக்குகள் விழுந்து, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. ஆக ஜெயலலிதா பெற்ற 1.51 இலட்சம் ஓட்டுகளும் நேர்மையாக பெற்றதாக அரசியல் அறிந்த யாரும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவைகள் அத்தனையும் பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஓட்டுகளும் கள்ள ஓட்டுகளும்  தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஊழலுக்கும் ஜனநாயகத்திற்கும் நடந்த போட்டியில் ஊழல் வென்றுவிட்டது. ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது. அனால் இடதுசாரிக்கட்சிகளின் வேட்பாளர் பெற்ற 9710 வாக்குகளும் பணம் கொடுத்து வாங்கப்பட்ட வாக்குகள் அல்ல. அத்துனையும் நேர்மைக்கு மக்கள் தந்த நம்பிக்கை வாக்குகள். ஊழலுக்கு எதிரான வாக்குகள். அதுவும் ஜெயலலிதாவிற்கு எதிராக நேரடியாக போட்டியிட்டு இடதுசாரிகட்சிகள் சுமார் 10,000 வாக்குகளை நெருங்கியிருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் வளர்ச்சியையும், மக்கள் இடதுசாரிக்கட்சிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையுமே காட்டுகிறது. 

கருத்துகள் இல்லை: