செவ்வாய், 28 ஜூலை, 2015

மரணதண்டனை மட்டுமே தீவிரவாதத்திற்கு தீர்வாகாது...!


               சோவியத் யூனியன் சிதறுண்டு போனபிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் புதிதாக நெருக்கம் ஏற்பட்டபிறகு, நம்  நாட்டில் குறிப்பாக வடமாநிலங்களில் அவ்வப்போது திடீர் திடீரென்று குண்டுகள்  வெடிக்க தொடங்கின.  அதன் விளைவாக அப்பாவி மக்கள் பலபேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால்  குண்டு வைத்தவர்கள் எவரும் அப்பாவி மக்களை சாகடித்ததை தவிர  இதுவரையில் எதையும் சாதிக்கவில்லை என்பதே உண்மை. இந்தியாவை பொருத்தவரை இது போன்ற குண்டுவெடிப்புகளில் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும்  இந்துத்துவா தீவிரவாதம் அல்லது காவி தீவிரவாதம் இரண்டுக்குமே தொடர்பு இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் இஸ்லாமிய தீவிரவாதத்தையே முன்னிறுத்தி பிரதானமாக காட்டுவார்கள். 
              இந்த இரண்டு தீவிரவாதத்திற்கும் அதிகம் பாதிப்படைந்து சிதைந்து போனது மும்பை நகரம் தான் என்பதை நாடறியும். இன்றும் மும்பையில் மக்கள் அச்ச உணர்வோடு தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. இதில் இந்து  தீவிரவாத  அமைப்புகள் செய்கிற குண்டுவெடிப்புகள் மூடி மறைக்கப்பட்டுவிடும் அல்லது இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தப்பட்டு திசைத்திருப்பப்படும். அதையும் மீறி ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்று திசைத்திருப்பியபோது, அந்த குண்டுவெடிப்புகளில்   தொடர்புடைய  இந்துத்துவா தீவிரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்து வெளியுலகத்திற்கு காட்டினார். அதையும் இந்த நாடு பார்த்துக்கொண்டு தான் இருந்தது.
        ஆனால் குண்டுவெடிப்புகளை நடத்தி அப்பாவி மக்களை கொன்ற அவர்கள் யாருக்கும் மரணதண்டனை அளிக்கப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை என்பதும் உண்மை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகள் அகப்பட்டாலோ அல்லது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டாலோ, அவர்கள் இரகசியமாக விசாரிக்கப்பட்டு இரகசியமாகவே அவசர அவசரமாகவே தூக்கிலிட்டு கொன்றுவிடுவார்கள். ஆட்சியாளர்களுக்கும், நீதிமன்றத்திற்கும், ஊடகங்களுக்கும், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றால் பழிவாங்கும் உணர்வு மேலோங்கிவிடும். அவர்களை தூக்கில் போட்டு கொன்று விட்டு தான் மறுவேலையை பார்ப்பார்கள். இவர்களுக்கு குண்டுவைக்க காசு கொடுத்து வேலைக்கு வைத்தவர்கள் யார் என்பது கூட அறியாமல் இந்த பாதக செயலை செய்து மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் நமது சட்டம் எய்தவனை விட்டுவிட்டு அம்பை தான் தண்டிக்கும்.
             அப்படியாக தானாக வந்து காவல்துறையிடம் மாட்டிக்கொண்டவர் தான் இந்த யாகூப் மேமன். கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம்  12ஆம் தேதி அன்று மும்பையில்  12 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில்  257 பேர் கொல்லப்பட்டனர். சுமார்  700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவராக கருதப்பட்ட யாகூப் மேமன் தானாகவே சரணடைந்தார்.  பின்னர் இவ்வழக்கில் யாகூப் மேமனுக்கு எதிராக சாட்சிகள் அமைந்ததால் நீதிமன்றம் அவருக்கு  தூக்குதண்டனை விதித்தது. அந்த குண்டுவெடிப்பில் நேரடி தொடர்புடைய ஆறு பேருக்கும் தூக்குதண்டனை கொடுக்கப்பட்டு பின்பு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டநிலையில், அந்த குண்டுவெடிப்பில் சம்பந்தமில்லாத அல்லது நேரடி தொடர்பில்லாத யாகூப் மேமனுக்கு மட்டும், தூக்குதண்டனையிலிருந்து குறைப்பதற்கான அவரது கருணை மனுவை நீதிமன்றமும், மகாராஷ்டிரா மாநில அரசும், குடியரசுத்தலைவரும் கொஞ்சம் கூட கருணையில்லாமல் தள்ளுபடி செய்தனர் என்பது வேதனைக்குரியது. 
         இஸ்லாமிய தீவிரவாதமோ அல்லது இந்துத்துவா தீவிரவாதமோ, தீவிரவாதம் என்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.  எதை சாதிப்பதற்கும் தீவிரவாதம் என்பது தீர்வாகாது. அதேப்போல் தீவிரவாதச் செயலில் ஈடுபடுபவர்களை அல்லது சந்தேகிக்கப்படுபவர்களை தூக்கிலிட்டு கொல்வது என்பதும் தீவிரவாதத்திற்கு தீர்வாகாது. அரசு இதை உணரவேண்டும். உணர்ந்து தூக்குக்கயிற்றை நெருங்கிக்கொண்டிருக்கும் யாகூப் மேமனுக்கு கருணைகாட்டி தூக்குதண்டனையிலிருந்து விடுவித்து ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும். 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Please provide evidences that yahope menon is not involved in the bomb blast and get him out of the death sentence. Just bluffing is shows as same as fooling people in communal politics